08-10-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வெளியூரில் இருந்து கொண்டு “மெட்ராஸ்ல காத்தடிக்குதாண்ணே.. வெயில் அடிக்குதாண்ணே..” என்று அப்பிராணியாக அக்கறையாக விசாரிக்கும் நமது அன்புத் தம்பி ‘நையாண்டி நைனா’ போன்ற ஊர்ப்பாசம் கொண்ட பதிவர்களுக்காக இந்தப் பதிவு..!!!
‘புலிவாலைப் பிடித்த கதை’யாகப் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட நடிகை புவனேஷ்வரியின் கைது.
எப்போதும் போல இந்த மாதத்தின் கைது கணக்கில் ஒன்றைக் கூட்டிக் காட்டுவதற்காக அலைந்து திரிந்த விபச்சாரத் தடுப்பு போலீஸாருக்கு, ஒரு பெரிய கையைப் பிடித்து தங்களது மேலதிகாரிகளிடம் மெடல் வாங்க வேண்டும் என்று ஒரு நப்பாசை.
அந்த ஆசையை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, விஸ்தாரப்படுத்தி ஒரு திரைக்கதை எழுதி புவனேஸ்வரியை எப்படியோ பிடித்துப் போட்டுவிட்டார்கள். ஆனால் இந்த பாய்ச்சல் ரெய்டு நடத்திய போலீஸாருக்கு பாராட்டும், பரிசும், மெடலும் கிடைப்பதற்குப் பதிலாக ‘கும்மாங்குத்து’ கிடைத்திருக்கிறது.
“பிடிக்கிறதுக்கு வேற ஆளே இல்லையா..? சும்மாவே இருக்க மாட்டீங்களா? ஏன்யா பிரச்சினையை கிளப்புறீங்க..?” என்கிற ரீதியில் காவல்துறை மேலிடத்தில் இருந்தே டோஸ்கள் ஹெவியாக கிடைத்திருக்கிறதாம். விபச்சாரப் பிரிவு போலீஸார் நொந்து, நூடூல்ஸான நிலைமையில் உள்ளனர்.
இதற்கிடையில் தங்கள் மீது அவதூறாக செய்தியைக் வெளியிட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட நடிகைகள் கண்ணீர் மல்க நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அழுது புலம்ப உடனடி கண்டனங்களும், கண்டனக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
தனக்கு ‘கலை உலக உழைப்பாளி’ பட்டத்தை வழங்க திரையுலகம் ஆர்வமாகக் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவர்களே கண்ணீர்விடும்படியான சூழல் உருவாகிவிட்டதால் அந்தக் கண்ணீரைத் துடைக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு.
கண்டனக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே இந்தப் பக்கம் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து செய்தி ஆசிரியரைக் கைது செய்து தனது நேர்மையை பறை சாற்றிக்கொண்டுள்ளது காவல்துறை. தனது திரையுலகப் பாசத்தை இப்படியாகக் காட்டியிருக்கிறார் முதல்வர்.
ஆனால் அவரே அடிக்கடி சொல்லிக் கொள்ளும் தானும் ஒரு பத்திரிகையாளன்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் அடுத்த நாளே அவருக்கு உருவாகியிருப்பது ஒரு சுவையான திருப்பம்தான்..
இதற்கு முன்பாக உண்மையாகவே இந்த விஷயத்தில் ‘தினமலர்’ பத்திரிகையில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் மேலும் தொடர்ந்து படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.
அருமைத் தம்பி பாலபாரதி, ‘தினமலரில்’ அந்தச் செய்தி அச்சுக்குப் போன கதையையும், அதன் பிறகு அந்த செய்தியாளர் என்ன ஆனார் என்பது பற்றியும் இங்கே எழுதியுள்ளார்.
தயவு செய்து அதனைப் படித்துவிட்டு பின்பு இங்கு வந்து தொடரவும்.
கண்டனக் கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டு ‘காவரேஜ்’ செய்யலாம் என்று நினைத்து நடிகர் சங்கத்திற்கு சென்றேன்.
கண்டனக் கூட்டத்திற்காக பெரிய போஸ்டரை தயார் செய்து தெருவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். போவோர், வருவோருக்கெல்லாம் தெரியட்டுமே என்பதற்காக இந்த ஏற்பாடாம்..
“பத்திரிகையாளர்கள் ஓகே.. ஆனால் வெளியாட்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க ஸார்.. ஸாரி..” என்றார்கள் வாசலிலேயே.
20-க்கும் அதிகமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள், கண்டனங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் பிடித்தபடி நின்றிருந்தனர்.
வாசல் அருகே வைக்கப்பட்டிருந்த ரிஜிஸ்தரில் நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் எண்ணைக் குறிப்பிட்டு கையெழுத்திட்ட பின்புதான் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். எந்த வழியிலும் உள்ளே போக முடியாத சூழல் இருந்ததால், அப்படியே திரும்பிவிட்டேன்.
இனி வருவது நேற்றைக்கு அங்கே நடந்த நிகழ்வுகள் பற்றி இன்றைய செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் வந்த செய்திகளின் தொகுப்பு..
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் இந்தக் கண்டனக் கூட்டம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடிகைகள் மஞ்சுளா, நளினி, சீதா, ஸ்ரீப்ரியா, அஞ்சு, ஷகிலா, தாரிகா, சத்யப்ரியா, பாத்திமாபாபு, லதா, ரேவதி, குயிலி, ராதிகா, ஷர்மிளி, கோவை சரளா, பசி சத்யா, ரோகிணி, பூர்ணிமா பாக்கியராஜ், சபீதா ஆனந்த், சச்சு, நித்யா, ஊர்வசி, சங்கீதா…
நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, ராதாரவி, விஜயகுமார், அருண் விஜய், கார்த்தி, சாந்தனு, உதயா, ஹரிகுமார், பவன், கவுண்டமணி, எஸ்.வி.சேகர், விவேக், சார்லி, ரமேஷ்கண்ணா, நாசர், மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், பாபுகணேஷ், சின்னி ஜெயந்த், மாஸ்டர் கணேஷ், பொன்வண்ணன், ஜீவன், பிரேம், ஸ்ரீமன், வையாபுரி, மயில்சாமி, விச்சு, குமரிமுத்து…
பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, செயலாளர் காட்ரகட்ட பிரசாத், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பொருளாளர் காஜாமைதீன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், திரைப்பட பாதுகாப்பு பேரவை தலைவர் கே.ராஜன், பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், சேரன், பி.ஆர்.ஓ. சங்க தலைவர் விஜயமுரளி, ஜனநாயக மாதர் சங்க தலைவி வாசுகி, சின்னத்திரை எழுத்தாளர் சுபா வெங்கட் என்று பிரபலங்களும், நடிகர் சங்க உறுப்பினர்கள் பெருவாரியாகவும் கலந்து கொண்டு கோபத்தைக் கிளறியிருக்கிறார்கள்.
நடிகர்களில் ரஜினி, விஜய்காந்த் மற்றும் தாமு தவிர, மற்ற அனைவருமே பொங்கித் தீர்த்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக ஸ்ரீப்ரியா, விவேக், சத்யராஜ், சூர்யா, சேரனின் பேச்சுக்கள்தான் ஹைலைட் என்கிறார்கள். சேரனின் பேச்சு மட்டும் கிடைக்கவில்லை.
பேச்சாளர்கள் பலரும் ‘தினமலரை’ மட்டுமல்ல.. “பொதுவாகவே பத்திரிகைகள் அனைத்துமே நம்மை இப்படித்தான் எழுதுகின்றன.. பேசுகின்றன..” என்று சொல்லி அனைத்துப் பத்திரிக்கைகளையும் போட்டுத் தாக்கியுள்ளனர். ‘ராஸ்கல்ஸ்’, ‘பாஸ்டர்ட்ஸ்’ போன்ற சினிமா டயலாக்குகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.
இனி நடிகர், நடிகையரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்…
நடிகை ஸ்ரீபிரியா:
ரஜினி 14 வருஷத்துக்கு முன்னாடி என் கல்யாணத்தப்போ ‘வர்றேன்’னு சொல்லிட்டு வராம பொய் சொன்னதால, எனக்கு அவர் மேல கோபம் இருந்தது. ஆனா இப்ப எங்களுக்கு ஒரு அவமானம் என்றவுடன் அவர் வந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கு.
என்னால சரியா பேச முடியல. அழுகைதான் வருது. அதனால் எழுதிக் கொண்டு வந்ததைப் படித்து விடுகிறேன்.
நான் 35 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். என்னை பற்றி தவறாக எழுதியவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள். யாரோ ஒரு கேடுகெட்ட, நல்ல தாய், தந்தைக்குப் பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது. த்தூ.. பாஸ்ட்டர்ட்..!
நாங்களும் சாதாரண பெண்கள்தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மா விடாது. எங்கள் உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. திரைக்குப் பின்னால் நாங்களும் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். ஏன் உங்க வீட்ல உங்களைச் சுத்தி இதெல்லாம் நடக்கிறதேயில்லையா?
விபச்சாரத்தில் ஈடுபடுவதாக என் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள். நான் இதற்கு பிறகும் மவுனமாக இருந்துவிட்டால் அது என் கனவருக்கும், பிள்ளைகளுக்கும் நான் செய்யும் துரோகம் ஆகிவிடும். நான் கலங்கிப்போவதை பார்த்து “நீ ரொம்ப தைரியமான பொண்ணு… எதுக்கு இப்படி கலங்குற..?” என்று கேட்கிறார்கள். நான் தைரியமான பொண்ணுதான். ஆனால் நானும் மனுஷிதானே. இது போன்று எங்களை அவமானப்படுத்தும் உங்களையெல்லாம்…(சென்ஸாராம்)
நடிகர், இயக்குநர் சேரன் :
நடிக்க வருகிற பெண்ணுக்கும் இதயம் உண்டுங்கிறதை மறந்த அந்த ராஸ்கல்ஸ்.. உன் வீட்டுப் பிள்ளை ஓடிப் போகும்போது தெரியும்டா அந்த வலி..!
நடிகை நளினி:
ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா நான். என்னைப்பற்றி இப்படியெல்லாம் எழுதுறாங்களே.. என் பிள்ளைகள் மனசு என்ன பாடுபடும். கணவரை பிரிந்தும் தனியாக வாழ முடியும் என்று என் பிள்ளைகளை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் செய்வது நியாமா?
இது இத்தோடு நிற்கிற பிரச்சனையில்லை. இந்த பிரச்சனையை நாங்க சும்மா விடப்போவதில்லை. நான் தைரியமான பொண்ணு. அதனாலதான் இவ்வளவு வேதனையிலும் தாங்கிக்கொண்டு போராடுகிறேன்.. இந்த செய்தி எழுதினவன் மட்டும் கைல கிடைச்சான்…
நடிகை சீதா :
இதுவும் ஒரு வகையில் கொலை குற்றம்தான். கேரக்டர் கொலை. இதற்காக நடக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் நான் முன்னால் நிற்பேன்.. இதை நெனச்சு நெனச்சு ரொம்ப வேதனையா இருக்கு. என்னால தாங்க முடியல. எங்களுக்கும் குடும்பம் இருக்கு. பொறுப்பு இருக்கு என்பது அவங்களுக்கு ஏன் புரியமாட்டேங்குது. எங்க மனச ஏன் புரிஞ்சுக்கல. இதுக்கு மேல என்னால பேச முடியல.. (என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.)
நடிகை ரேவதி :
சில்க் ஸ்மிதா இறந்தப்போ நான் ரோகிணி, ரஞ்சிதா மூவரும் வடபழநி பக்கம் இருந்ததால் உடனே போனோம்.. மருத்துவனையில் பத்திரிகை போட்டோகிராபர்கள் சில்க்கின் சடலத்துக்கு கிளாமர் டிரெஸ்ஸை போட்டு படம் எடுக்க முயன்றாங்க.. சிலுக்கு கவர்ச்சி நடிகைங்கிறதால கிளாமர் போட்டோ வேணுமாம். ஆனா நாங்க மூணு பேரும் கடுமையா எதிர்ப்புத் தெரிவிச்சோம்.
நடிகர் விவேக்:
இந்த அவதூறு செய்தியைப் பார்த்தவுடனேயே ஸ்ரீப்ரியா, அஞ்சு, நளினி போன்றவர்களிடம் போனில் பேசினேன். அப்போது “தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று சீதா சொன்னதாக நளினி கூறினார். அதுபோல், “நான் செத்துவிட்டது போல் உணர்கிறேன்” என்று ஸ்ரீப்ரியா கூறினார். கலைஞர்களின் மனதை இப்படி புண்படுத்துவதற்காகவா பத்திரிகை நடத்துகிறீர்கள்..?
எனக்கு வருகின்ற கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்த செய்தியை நினைத்தால் உடம்பு கொதிக்கிறது. இதுக்கு முன்னாடியும் நிறைய எழுதியிருக்காய்ங்க.. அப்பவே நாமெல்லாம் கூடி கண்டிச்சிருக்கணும். விரல் நடிகர்னா சிம்பு, உயரமான நடிகைன்னா நமீதான்னு தெரியாதா? ஏண்டா கிசுகிசுவா எழுதறீங்க..? தைரியமிருந்தா பேரு, இடம் போட்டு எழுது.. ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா நேருக்கு நேரா வாடா..!
டேய் எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க? உங்கக்கா, உங்கம்மா, உன் பாட்டி நிர்வாண படம் இருந்தா அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல போட்டியே.. அப்படியே உன் பொண்டாட்டி, உன் அக்கா, உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதையும் எடுத்துப் போடு. உன் அம்மாவும், உன் அக்காவும் குளிக்கும்பொது ரெயின் கோட்டு மாட்டிக்கிட்டாடா குளிப்பாங்க? அவங்களும் நிர்வாணமாத்தாண்டா குளிப்பாங்க. அத எடுத்து உன் பத்திரிகையில போடுறா. இப்ப நான் போடறேன் மேட்டர்.. உங்க ஆயா, அம்மா, மனைவி, அக்கா – தங்கச்சிகளை அனுப்புங்கடா.. அவங்களை மார்ப்பிங்ல ஜட்டியோட நான் மாத்தி தர்றேன்.. அதைப் போடு உன் பத்திரிகையில! அப்பத் தெரியும் உனக்கு அந்த வலி..!
ஒரு குவார்ட்டர், பிரியாணி, முந்நூறு ரூபா குடுத்தா எழுதறவிங்கதான..! சினிமா செய்தி இல்லாம பத்திரிகை நடத்த முடியுமாடா? ஏற்கெனவே எழுதினப்ப நாம நடவடிக்கை எடுத்திருந்தா பத்திகை நாய்ங்க இப்ப இப்படி எழுதுமா..?
மஞ்சுளா எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு..? கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்ச நஞ்சமல்ல. எம்ஜிஆர் – சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு..? அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா.. அவங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா..? இந்த செய்தி அவருக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்.. இப்ப சொல்றேன்.. இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த (சென்ஸார்)பய ‘தினமலர்’ வேண்டவே வேண்டாம்…
நடிகர் சத்யராஜ்:
எங்க ஊர்ல அந்த பத்திரிகைக்குப் பேரே இழவுப் பத்திரிகைதான். நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா செய்தி போட்டு வீணா சண்டை மூட்டி விட்டுட்டானுங்க.
விவேக் சொன்ன மாதிரியே பண்ணிரலாம்..! கிராபிக்ஸ் பண்ணும்போது, ரொம்ப சின்ன ஜட்டி, ரொம்ப சின்ன பிரா மாட்டி விட்றலாம்..
ஒரு தடவை எம்.ஜி.ஆரைப் பத்தி ஒரு பத்திரிகைல தப்பா எழுதிட்டாங்க. ஏவி.எம். ஸ்டூடியோவுல தலைவர் ஷூட்டிங்ல இருந்தாரு. அப்போ அந்தச் செய்தியை எழுதின நிருபர் அந்தப் பக்கம் வந்திருக்காரு. அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர். தன் ஸ்டைல்லேயே சிரிச்சபடி சாப்பிடலாம் வாங்கன்னு நிருபரை மேக்கப் ரூமிற்கு கூட்டிட்டுப் போனார். உள்ள வச்சு சும்மா பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திட்டார்.
மேக்கப் ரூம்ல இருந்த ஒரு சட்டையை எடுத்து நிருபருக்கு மாட்டிவிட்டு தலைவரே அந்த நிருபருக்கு தலை சீவிவிட்டு, பவுடரும் போட்டு அனுப்பினார். அந்த நிருபர் தன் ஆபீஸ்ல வந்து எம்.ஜி.ஆர். அடிச்சு உதைச்சார்.. அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு குமுறினார். ஆனால் வெளிக்காயம் இல்லாம உள்குத்தாவே தலைவர் அடிச்சிருந்தார். காயம் இல்லாததால் எம்.ஜி.ஆர். அடிச்சார் என்பதை யாரும் நம்பலே..!
சரத்ல இருந்து எல்லாருமே எம்.ஜி.ஆர். ரசிகர்கள்தான். சரத்துக்கு கராத்தே, குங்பூன்னு நிறைய டெக்னிக் தெரியும். இனிமே அதைப் பயன்படுத்த வேண்டியதுதான்..
சமீபத்தில் ஓவியக் கண்காட்சி நடத்தி அந்த நிதியை சமூக அமைப்பு ஒன்றுக்குக் கொடுத்தார் ஸ்ரீபிரியா. அவரைப் பார்த்து வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்கிறாள் என் மகள். வழிகாட்டியாக வாழும் ஸ்ரீபிரியா போன்றவர்களை அவதூறாக எழுதியதை மன்னிக்கவே கூடாது.
இந்த இடத்தில் ஸ்ரீபிரியா பேசும்போது அந்த பத்திரிகை ஆசிரியரைப் பற்றி சொன்ன ‘பாஸ்டர்ட்ஸ்’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கையத் தூக்குங்க.. (எல்லோரும் ஆரவாரத்துடன் கையைத் தூக்க…)
அப்ப இதை நான் மட்டுமல்ல.. நடிகர் சங்கத்தில் உள்ள அனைவருமே வழிமொழிகிறோம். இதையே நம்ம தீர்மானமா போட்டு அந்தப் பத்திரிகைக்கும் அனுப்பி வைங்க! போடு.. எங்க எல்லார் மேலேயும் மான நஷ்ட வழக்குப் போடுறா.. உன்னால புடுங்கக்கூட முடியாது..
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி:
ஆந்திராவில் இப்படியெல்லாம் ஒரு கிசுகிசு செய்தி, அவதூறு செய்தி கூடப் பார்க்க முடியாது. அப்படி யாராவது எழுதினால் மீண்டும் அவன் பேனா பிடிக்கவே முடியாது.. என் மனைவி இந்த பத்திரிகைக்கார (சென்சாராம்)களால் எவ்வளவு இம்சைக்கு உள்ளானார் தெரியுமா?
நடிகர் சூர்யா:
சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதறாங்க. அவங்க பின்னாடி நாம ஓடிக்கிட்டிருக்க முடியாது.
இவர்களை சும்மா விடக்கூடாது. அவனுங்களை லீகலா நசுக்கணும். அதுக்காக லீகல் அமைப்பு ஏற்படுத்தறதுக்கான செலவை நான் ஏத்துக்குறேன்.. அந்த குழுவைக் கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும்…
ஃபங்ஷன்ல நடிகைகள் சேர்ல உட்கார்ந்திருக்கும்போது சேருக்கு அடியில இருந்து போட்டோ எடுக்கிற வேலையை இனிமே பண்ணாதீங்க..!
நடிகர் அருண் விஜய் :
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்த செய்தியை எழுதிய ரிப்போர்ட்டர் மற்றும் அலுவலகத்தில் உள்ள நான்கு பேரையாவது அடித்து துவம்சம் செய்து இழுத்து வந்து எங்கம்மா (மஞ்சுளா) காலடியில் போட்டிருப்பேன். ஆனால் சங்கம் என்னைத் தடுத்து விட்டது…
நடிகர் தாமு :
நண்பர்களே.. ஆவேசம் வேண்டாம். பத்திரிகைகள் தயவு நமக்குத் தேவை. நான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வரக் காரணம் பத்திரிகைகள்தான். நான் மட்டுமல்ல.. இன்னும் பல கலைஞர்களை பத்திரிகைகள்தான் உயிரோடு வைத்திருக்கின்றன. அவர்களைத் திட்ட வேண்டிய அவசியமில்லை. எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். பத்திரிகை நண்பர்களுக்கும் சினிமாவின் தயவு தேவையாக இருக்கிறது. எனவே முடிந்தவரை இணக்கமாகப் போக வேண்டும். ஆதாரமில்லாத அவதூறுகளைத் தவிர்க்கலாமே..
நடிகை ராதிகா :
“கத்தியைவிட கூர்மையானது பேனா..” என்பார்கள். அதை நல்லதுக்குப் பயன்படுத்தாமல் அந்தப் பத்திரிகையில் அசிங்கமாக எழுதியிருக்கிறார்கள். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்றார் அண்ணா. அது நல்லவர்களுக்குத்தான். கெட்டவர்களுக்கு இல்லை. இவர்களை மன்னிக்கவே கூடாது.
நடிகர் விஜயகுமார் :
சிவாஜி சிலை திறப்பு விழாவுக்காக மதுரை சென்றிருந்தபோது இப்படியொரு அவதூறு செய்தி வந்திருப்பதாகச் சொன்னார்கள். கொதித்துப் போனேன்.
நான் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு தினமலர் அலுவலகம் சென்று அங்கே கண்ணில் படும் நான்கு பேரை வெட்டிப் போட்டு விட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருந்தது.
இங்கு ரஜினிகாந்த் பேசியது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. குறிப்பிட்ட பத்திரிகையை ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் என எல்லா நடிகர்களின் ரசிகர்களும் வாங்கவேகூடாது. அவதூறு செய்தியை அரைபக்கம் போட்டதுபோல், மன்னிப்பு கேட்கும் செய்தியையும் அரைபக்கம் போடும்வரை விடமாட்டேன்.
நடிகர் விஜயகாந்த் :
நடிகர்கள் ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அவர்களுக்கும் மனசு இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. தன்மானம் இருக்கிறது. மதித்து எழுத வேண்டும்.
செய்தி வெளியிட்ட பத்திரிகையே மறுநாள் மறுப்பும் வெளியிட்டிருக்கிறது. பத்திரிகை தர்மம் என்பது இரு பக்கமும் கேட்டு வெளியிட வேண்டும். பத்திரிகைகள் பெருகிவிட்டதால் செய்தியை முதலில் தாங்கள்தான் வெளியிட வேண்டும் என்பதற்காக ஆராயாமல் வெளியிடுகிறார்கள். முதல் நாள் பெரிதாக வருகிற செய்தி மறுநாள் சிறிதாக வருகிறது. பத்திரிகை தர்மம்போல காவல் துறையும் கட்டுப்பாடுகளுடன் செய்திகளை கொடுக்க வேண்டும்.
நான் நடிகர் சங்க உறுப்பினர். நடிகர் சங்கத்துக்கு கட்டுப்பட்டவன். நடிகர் சங்கம் சாதாரண அமைப்பு கிடையாது. கட்டுக்கோப்பானது. அது முடிவெடுத்தால் பலமானதாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும்.
நடிகர் சரத்குமார்:
நான் பத்திரிகையாளர் குடும்பத்தில் இருந்து வந்தவன். எல்லா பத்திரிகையாளர்களும் இப்படி எழுதுவதில்லை. குறிப்பிட்ட அந்தப் பத்திரிகை மட்டுமே விற்பனையில் புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு இன்று மண்ணை கவ்வியிருக்கிறது. கலைத்துறையைப் பற்றி கீழ்த்தரமான செய்தியையே எப்போதும் அவர்கள் வெளியிடுகிறார்கள்.
நான் ஒரு நடிகையைக் காதலிச்சதா அந்த பத்திரிகைல எழுதியிருந்தாங்க. காதலிச்சதாகூட இருக்கட்டுமே.. அந்த மேட்டர் கடைசியில.. ‘கிறுக்குப்பய நாட்டாமை’ன்னு எழுதியிருந்தாங்க. நான் 200 பேரோட போய் அந்த ஆபீஸ ‘அட்டாக்’ பண்ணினேன்.
நாங்க மக்களை சந்தோஷப்படுத்த வந்தவங்க. எங்களைப் பத்தி இப்படி எழுதியதால் நாங்க போராடிக்கிட்டிருக்கோம்.. ஆனா இதுவே ஒரு தொழில் அதிபரை பற்றி எழுதியிருந்தால் அவர் கண்மறைவாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு சென்றிருப்பார். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வரையும், போலீஸ் கமிஷனரையும் கேட்டோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
செல்வமணி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ‘ரோஜாவுக்கு எய்ட்ஸ்’, ‘எனக்கு எய்ட்ஸ்’ என்றெல்லாம் செய்தி போட்டார்கள். அதனால் எங்களுக்கு எத்தனை பாதிப்பு தெரியுமா? ‘தினமலர்’ அவதூறு செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும், சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்..? அய்யோ நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடு பார்த்திருக்கவே முடியாது (சொல்லி விட்டு அழுதார்).
இந்தப் பிரச்சினைகள் இனிமேலும் வராமல் தடுக்க விரைவில் நாங்களே ஒரு புதிய பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறோம். இதுதவிர, இம்மாதிரி அவதூறுகளைச் சந்திக்கவென்றே ஒரு வக்கீலை சங்கத்தில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்…!
நடிகர் ரஜினிகாந்த் :
நான் கோபமாக இருந்தால், அதிகமாக பேச மாட்டேன். கோபமாக இல்லையென்றால் நிறைய பேசுவேன். ரொம்ப கோபமாக இருந்தால் பேசவே மாட்டேன். இப்போது நான் ரொம்ப கோபத்தில் இருக்கிறேன். இருந்தாலும் என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் எந்தப் பெண்ணை கைது செய்து அழைத்துச் செல்லும்போதும் அவர்களை நிற்கவைத்து, தலைகுனிய வைத்து, அதை மறைத்து போட்டோ எடுத்துப் போடாதீர்கள்.
விபசார வழக்கில் கைது செய்யப்படுகிற பெண்கள் உல்லாசத்துக்காக அந்த தொழிலை செய்வதில்லை. பாவம், இரண்டு வேளை சோற்றுக்காக செய்கிறார்கள். அவர்கள் போட்டோவை மட்டும் போடுகிறீர்கள்.. அவர்களோடு சென்றவர்களையும் எடுத்துப் போட வேண்டியதுதானே..? தப்பு செய்தவர்களுக்காகவே இவ்வளவு பேசுகிறேன்.
தப்பே செய்யாத இன்று மிகப் பெரிய அந்தஸ்தோடும், மதிப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பர்களைப் பற்றிய செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது ஏப்ரல் முட்டாள்கள் தினம் போல் டூப் ஆக இருக்குமோ என்று நினைத்தேன். இப்படியா..? நிஜமாகச் சொல்கிறேன்.. படித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இரவு முழுவதும் தூங்கவில்லை.
ஸ்ரீபிரியா, மஞ்சுளா, நளினி, சீதா எவ்ளோ பெரிய கலைஞர்கள். உங்களைப் பற்றி உங்களைப் பெற்றவர்களுக்கும், கணவனுக்கும், குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எங்களுக்கும் தெரியும் நீங்கள் எப்படி என்று..? அதனால் இவர்கள் எழுதுவதை விடுங்கள்..
சம்பந்தப்பட்ட பத்திரிகையின் துணை ஆசிரியரை கைது பண்ணிவிட்டதாகச் சொன்னார்கள். அதற்கு முயற்சி எடுத்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான், கோபமாக இருக்கிறேன். இதற்கு மேல் பேச விரும்பவில்லை.
1. நடிகை புவனேஷ்வரி காவல்துறையினரிடம், நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பற்றி தவறாக கூறியதாகவும், காவல்துறையினர் பத்திரிகைகளிடம் அதைக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையினர் இப்படிப்பட்ட செய்தியை அளிக்கவில்லை என்றால், காவல்துறை பற்றி பொய்யான செய்தியை பரப்பி சட்டம் ஒழுங்கு துறையை களப்படுத்திய அந்த நாளிதழின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்தப் பத்திரிகைக்கு தடைவிதிக்க வேண்டும்.
2. தவறாக விமர்சிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
3. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ரசிகர்கள், இன்று முதல் அந்த நாளிதழுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
4. உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலையவும், திரையுலகினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கும் ஆளாக்கி, பெண்களை இழிவுபடுத்திய அந்த நாளிதழை ஏன் தடை செய்யக்கூடாது? என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. அந்த நாளிதழை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக திரையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகளிடம் ஆதரவு கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
6. தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தத் தீர்மான நிறைவேற்றலுடன் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது நடிகர் சங்கம்.
அந்தப் போராட்டத்தைத் துவக்கியிருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான்.
தங்களை ‘பாஸ்டர்ட்ஸ்’ என்றும், ‘ராஸ்கல்ஸ்’ என்றும் நடிகர் சங்கக் கூட்டத்தில் அழைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் இன்றைக்கே அவர்கள் தங்களது எதிர்ப்புக் குரலை எழுப்பியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே பத்திரிகை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்து தைரியமாக செய்தி ஆசிரியரை கைது செய்திருக்கும் காவல்துறையினரின் அதிரடியால் கோபமாகிப் போயிருந்த அவர்களுக்கு, நடிகர் சங்கக் கூட்டத்தில் தங்களுக்குக் கிடைத்த ‘அர்ச்சனை’யைக் கேட்டு ஆவேசப்பட்டுத்தான் போயிருக்கிறார்கள்.
இதற்காக இன்று மதியம் கூடிய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இது பற்றி காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபாலும் கலந்து கொண்டுள்ளார். அப்போது கோபால், சில நடிகைகளைப் பற்றிய பல பலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதனை தான் வெளியிடுவதாகவும் அவர்களது இந்த கடும் தாக்குதலை எதிர்கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்.
தங்களைத் தாக்கி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருக்கும் நடிகர்கள் விவேக், ஸ்ரீப்ரியா, சத்யராஜ், விஜயகுமார் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி உழைப்பாளர் சிலை அருகே இன்று மதியம் திடீரென்று சாலை மறியல் செய்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
பத்திரிகையாளர்கள் என்பதால் கை வைக்க பயந்து போன காவல்துறை விஷயத்தை மேலிடத்திற்கு பாஸ் செய்து அங்கிருந்து வந்த உத்தரவின்படி பத்திரிகையாளர்களை உடனுக்குடன் போலீஸ் கமிஷனரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது.
பத்திரிகையாளர்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் விவேக், ஸ்ரீப்ரியா, சத்யராஜ், விஜயகுமார் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்களாம். “எங்களது சக பத்திரிகையாளரை எந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்தீர்களோ, அதை புகாரின் கீழேயே இதற்கும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல் போராட்டம் பெரிய அளவுக்கு வெடிக்கும்” என்று எச்சரிக்கை விட்டுள்ளார்கள் பத்திரிகையாளர்கள்.
அவர்களிடம் பேசிய கமிஷனர் ராஜேந்திரன், “செய்தி ஆசிரியர் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை பிரயோகப்படுத்த முகாந்திரம் இருந்தால், அதே சட்டம் இந்த நடிக, நடிகையர் மீதும் பிரயோகப்படுத்தப்படும். அதில் எந்த மாறுதலும் இல்லை” என்று உறுதியளித்துள்ளாராம்.
இதற்கிடையில் விவேக் பேசிய பேச்சின் எதிரொலியாக ‘தினத்தந்தி’ பத்திரிகை அவரைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்புச் செய்தி பரவியுள்ளது.
‘பிள்ளையாரைப் பிடிக்கப் போய் குரங்காய் மாறியது’ என்பார்களே.. அது இந்த விஷயத்தில் உண்மையாகிவிட்டது.
இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி காவல்துறைதான். காவல்துறை எப்போதுமே தான் ஒரு நடவடிக்கை எடுத்தால் அதில் தங்கள் பெயர் கெடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்டவர்களை பற்றி எதிர்மறை செய்திகளை லேசுபாசாக பத்திரிகையாளர்களிடம் ஆஃப் தி ரிக்கார்டாக பரப்புவார்கள். இது மீடியா உலகத்துக்கே அத்துப்படி.
அப்படித்தான் இந்தச் செய்தியும் காவல்துறை மூலமாக செய்தியாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த நடிகைகள் லிஸ்ட் அனைத்து பத்திரிகைகளுக்குமே கிடைத்தது. தினமலரில் மட்டுமே வெளியாகவில்லை. முழுப் பெயருடன் வெளியான தவறு மட்டுமே தினமலரில் நடந்தது. மற்ற பத்திரிகைகளில் பெயர்களை மறைத்துதான் செய்தி வெளியானது.
ஆக, அத்தனை நாளிதழ் செய்தியாளர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தது என்றால் செய்தியை வெளியிட்டது நிச்சயம் காவல்துறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது எனது அனுமானம்.
புவனேஷ்வரி மீது பொதுமக்களுக்கு இரக்கம் வரக்கூடாது என்பதற்காகவும், மற்ற நடிகைகள் மீது பழி விழுந்தால் அவர்களது கோபம் புவனேஷ்வரி மீது பாயும். நம் மீது விழாது என்று நினைத்துத்தான் காவல்துறை இப்படி பிளேட்டை திருப்பிப் போட்டுள்ளது.
ஆனால் விஷயம் மறுபடியும் பல்டியாகி காவல்துறையினருக்கே உலை வைத்திருக்கிறது.
தம்பி பாலபாரதியின் செய்தியின்படி பிரிண்ட்டிங்கில் இந்தச் செய்தி வெளி வந்ததற்கு, அந்த நாளிதழின் துணை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும். நாளிதழின் செய்தி ஆசிரியர் தார்மீகப் பொறுப்பை ஏற்கத்தான் வேண்டும்.
ஏனெனில் இது ஒருவரை கொலை செய்வதற்கு சமமான குற்றச்சாட்டு. ஒரு நாள் குற்றம் சுமத்திவிட்டு மறுநாள் இல்லை.. சும்மா சொன்னேன் என்பதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடும்போது வைத்துக் கொள்ளலாம். பொதுவாழ்க்கையில் வைக்க முடியாது.
அதே பத்திரிகையின் தற்போதைய இளைய நிர்வாகியான அந்துமணி என்கிற ரமேஷிற்கும், ஒரு பெண் பத்திரிகையாளருக்கும் இடையில் நடந்த சண்டையின்போது உடனுக்குடன் ஒரு பக்க அளவுக்கு தன்னிலை விளக்கமளித்தும், அதுவொரு பொய்யான குற்றச்சாட்டு என்றும் சொல்ல முடிந்த ‘தினமலர்’, இந்த விஷயத்தில் கால் பேஜுக்கும் குறைவான ஓரிடத்தில் மன்னிப்பு செய்தியை வெளியிட்டு தப்பிக்க நினைப்பது மன்னிக்க முடியாதது..
‘தினமலர்’ பத்திரிகையை கண்டிக்கத்தான் வேண்டும்.. அதே போல் நடிகர், நடிகைகளும் விஷயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அவர்களைப் போலவே பேசிவிட்டதும் கண்டனத்துக்குரியதுதான்.
இன்று காலை நடிகர் சங்கப் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்ட நடிகைகளும் முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து தங்களது பிரச்சினையை சொல்லியிருக்கிறார்களாம். கூடுதலாக நடிகர்-நடிகைகளுக்கு நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.. ஐயோ.. முருகா.. எத்தனை வேலைதான்யா செய்வாரு அவரு..?
இந்தச் செய்தியைப் படம் பிடித்துக் கொண்டு போன அவசரத்துடன்தான், பத்திரிகையாளர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி களத்தில் குதித்துவிட்டார்கள்..
இப்போது இருவருக்குமே அவசரத் தேவை ஒரு நல்ல மீடியேட்டர்தான். ஏனெனில் பத்திரிகைகள் திரைப்படத்துறைக்கு அவசியம் தேவை. அவர்கள் இல்லையெனில் திரைப்படத்துறைக்கு மார்க்கெட் போய்விடும்.. பத்திரிகையாளர்களுக்கும் திரைப்படத்துறையினரின் தயவு நிச்சயம் தேவை. திரையுலகத்தினரின் செய்தி இல்லையென்றால் தமிழ்நாட்டில் பத்திரிகை பொழைப்பு ஓடாது..
இரு சாராரும் உடனுக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது பிரச்சினையை முடித்துக் கொள்வதே நல்லது.
விஷயத்தை பெரிதுபடுத்தினால் பாதிக்கப்படப் போவது இரு தரப்பினரும்தான்.. ஏனெனில் தவறுகள் இரு தரப்பினர் மேலேயுமே வண்டி, வண்டியாக உள்ளன. யாருக்காவது புரிந்தால் சரி..!
டிஸ்கி : பார்த்து ரொம்ப நாளாயிருக்குமேன்றதால இந்தப் புகைப்படம்..!
செய்திகள் உதவி : பல்வேறு பத்திரிகைகள், தின நாளிதழ்கள், இணையதளங்கள், வலைப்பதிவுகள்
புகைப்பட உதவி : http://www.indiaglitz.com