01-03-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
புதுதில்லி பாராளுமன்ற அரண்மனையில் அரசரும் அவர்தம் அமைச்சரவை சகாக்களும் சேர்ந்து வருடாவருடம் பிப்ரவரி மாதத்தில் இந்திய நாட்டு மக்கள் அனைவரின் கழுத்திலும் ஈரத்துணியைப் போட்டு சப்தமில்லாமல் நெருக்கிக் கொள்ளும் வைபவம் இந்தாண்டும் சென்ற வெள்ளிக்கிழமையன்று ஜெகஜோதியாக நடந்தேறியுள்ளது.
எப்போதும் பிப்ரவரி 28-ம் தேதியன்று நடக்கும் இந்தக் கொலைச் சம்பவம் இந்த வருடத்தில் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கொலைகாரர்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்ய மாட்டோம் என்று ஒரு தர்மநியாயத்தைக் கடைப்பிடிப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே கூடிப் பேசி அறிவித்து மக்களது கழுத்தை சிரித்தபடியே அறுத்துவிட்டார்கள். ச்சே.. காலண்டரும் நமக்கு எதிராக சதி செய்துவிட்டது.
இப்போது அந்த கழுத்தறுப்பு நடந்தேறிய பின்பு லேசாக கத்தி பட்டவர்களுக்கு ஒரு மருந்தும், ஆழமாக கத்தி ஏறியவர்களுக்கு வேறொரு மருந்துமாக விதவிதமான களிம்புகளையும், மருந்துகளையும், ஊசிகளையும் கொலைகாரக் கும்பல் வஞ்சகமில்லாமல் வாரி வழங்கியுள்ளது.
எப்போதும்போல் சூடு, சொரணையை சேட்டுக் கடையில் அடகுவைத்துவிட்டு சிங்கிடம் சிங்கிள் டீக்கு காசு கேட்டு பிச்சையெடுக்கும் நமக்கு இதுவே மிகப் பெரிய விஷயம் என்பதால்.. யார், யாருக்கு என்னென்ன வகை மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை ஒட்டு மொத்தமாக இங்கு படித்துத் தெரிந்து கொள்வோம்.
* பெட்ரோலியம் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்கள் மீதான உற்பத்தி வரி, 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு.
* கச்சா எண்ணை மீதான சுங்க வரி 5 சதவீதமாக உயர்வு.
* பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி, 7.5 சதவீதமாக உயர்வு.
* சுத்திகரிக்கப்பட்ட இதர பொருட்கள் மீதான சுங்க வரி 10 சதவீதமாக உயர்வு.
* பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படுகிறது.
* சிகரெட், பீடி, சுருட்டு ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி மாற்றி அமைக்கப்படுகிறது.
* உள்நாட்டில் தயாரிக்கப்படும் நிலக்கரி மீது டன்னுக்கு ரூ.50 வீதம் தூய்மையான எரிசக்தி செஸ் வரி விதிக்கப்படும்.
* போர்ட்லேண்ட் சிமெண்ட், சிமெண்ட் செங்கல் மீதான வரி உயர்த்தப்படுகிறது.
* செல்போன், வாட்ச், ரெடிமேடு ஆடைகள் ஆகியவை மீதான விசேஷ கூடுதல் வரி அறவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
* வால் மிளகு மீதான சுங்க வரி, 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* அட்டைப் பெட்டிகள் மீதான உற்பத்தி வரி, 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* மருந்து மற்றும் கழிவறை தயாரிப்பு சட்டத்தின் கீழ் அடங்கும் பொருட்கள் மீதான உற்பத்தி வரி, 16 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
* லேடக்ஸ் ரப்பர் இழை மீதான உற்பத்தி வரி, 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைப்பு.
* விளையாட்டு சாதனங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களுக்கு அளிக்கப்படும் வரி விலக்கு, மேலும் சில பொருட்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது.
* சூரிய சக்தியால் இயங்கும் சைக்கிம் ரிக்ஷாக்கள் மீதான உற்பத்தி வரி 4 சதவீதமாக குறைப்பு.
* மைக்ரோவேவ் ஓவன் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் மீதான சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* பலூன்களுக்கு உற்பத்தி வரி ரத்து.
* சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி மூலமாக, ரூ.43 ஆயிரத்து 500 கோடி நிகர வருவாய் மத்திய அரசு கஜானாவுக்குக் கிடைக்கும்.
* தனிநபர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் வரையிலான வர்த்தக மாதிரிகளை வரி செலுத்தாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இனிமேல், ரூபாய் 3 லட்சம் வரையிலான வர்த்தக மாதிரிகளை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
* ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி கிடையாது.
1 லட்சத்து 60 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.
5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும்.
8 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும்.
* இந்த புதிய வருமான வரிவிகித்தால், வருமான வரி செலுத்துபவர்களில் 60 சதவீதம் பேர் பலன் அடைவார்கள்.
* சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் வருமான வரியில் செய்யப்படும் கழிவுகள், 1 லட்சத்தில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
* வருமான வரி தாக்கல் ரிட்டனை எளிதாக்கும் வகையில், சரம்-2 என்ற புதிய 2 பக்க விண்ணப்ப படிவம் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
* நாடு முழுவதும் இரண்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு முதலீட்டுடன் தொடர்புடைய வரிச்சலுகை அளிக்கப்படும்.
* நேரடி வரி திட்டங்களில் ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் மத்திய அரசுக்கு இழப்பு.
* பயிர்க்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் வட்டி மானியம் 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* 20 லட்சம் வரையிலான வீடுகளுக்கு வீட்டுக்கடன் வட்டியில் ஒரு சதவீத வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த சலுகை, 2011-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இச்சலுகை வழங்குவதற்காக, பட்ஜெட்டில் 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்ளது.
* தமிழ்நாட்டில் திருப்பூர் சாயப்பட்டறை தொழிலுக்கு ஒரே கட்டமாக 200 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
* நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக, விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், இந்த ஆண்டு ஜுன் 30-ந் தேதிவரை, அதாவது, 6 மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.
* கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், கைத்தறிகள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதிக்கு மேலும் ஓராண்டு காலத்துக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* உள்நாட்டு நிறுவனங்களுக்கு உபரி வரி 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைப்பு.
* குறைந்தபட்ச மாற்றுவரி 15-லிருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு.
* சிறிய தொழில்களுக்கு உத்தேச வரிக்கான டர்ன்ஓவர் வரையறை 60 லட்சமாக அதிகரிப்பு.
* தொழில் நிறுவனங்களில் ஆண்டு வரவு செலவு 60 லட்சம்வரையும், தொழில் அமைப்புகளில் ஆண்டு வரவு செலவு 15 லட்சம்வரையும் இருந்தால் அவற்றுக்கு கணக்கு தணிக்கை தேவை இல்லை.
* செய்திகளை ஆன்லைனில் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி ரத்து.
* பொழுதுபோக்கு துறைக்கு சுங்க வரியில் சலுகை.
* எலும்பு முறிவு மற்றும் அறுவைச் சிகிச்சையில் பயன்படும் செயற்கை மூட்டு, தட்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து.
* குளிர்பதன நிறுவனங்களை அமைக்க இறக்குமதி திட்டங்களுக்கு சலுகை.
* ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்களுக்கு உற்பத்தி வரி ரத்து.
* பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
* சேவை வரி மூலம் ரூ.3 ஆயிரம் கோடி நிகர வருவாய் கிடைக்கும்.
* பெட்ரோலுக்கு விலை நிர்ணயிப்பதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
* பெட்ரோலிய பொருட்கள் மற்றும் உரங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ரொக்க மானியம் வழங்கும்.
* விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு 500 ரூபாய் உயர வாய்ப்புள்ளது.
* உரங்களில் உள்ள சத்து அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டம், வரும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.
* அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு எளிமைப்படுத்தும்.
* கூடுதலாக தனியார் வங்கிகளுக்கு லைசென்சு வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை.
* சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு உறுதி.
* உணவு பாதுகாப்பு வரைவு மசோதா தயார்நிலையில் உள்ளது. விரைவில் அது தாக்கல் செய்யப்படும்.
* நக்சலைட்டுகள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் நிறைவேற்றுவதற்கான செயல் திட்டத்தை திட்டக் கமிஷன் உருவாக்கும்.
* நேரடி வரிச் சட்டம், பொது விற்பனை வரி ஆகியவற்றை 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்த நடவடிக்கை.
* பொதுக்கடன் பற்றிய அறிக்கை, 6 மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படும்.
* 10 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு மேலும் ஓராண்டுக்கு ஒரு சதவீத வட்டி தள்ளுபடி.
* பெட்ரோலிய பொருட்கள் தவிர, அனைத்துப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி, 2 சதவீதம் உயர்வு.
* சேவை வரி 10 சதவீதமாக நீடிக்கும்.
* உள்கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரி கழிவுகளில் கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் கழிவு பெறலாம்.
* பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு.
* சில குறிப்பிட்ட நாடுகளின் கரன்சிகளைப் போல, இந்திய ரூபாய்க்கும் முத்திரைகள் வழங்கப்படும்.
திருப்பூர் சாயப்பட்டறை தொழிலுக்கு ரூ.200 கோடி மானியம் வழங்கப்படும். இதனால் ‘சாயத்திற்கே மானியம் வாங்கிக் கொடுத்த மகான்’ என்கிற பட்டத்தை நமது தமிழ்நாட்டின் குறுநில மன்னர் திரு.மு.கருணாநிதி பெறுவார் என்று தெரிவித்த நிதியமைச்சர், ஆனாலும் “இதற்காக ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அதற்கு தங்களை அழைத்துவிடுவாரோ என்று நமது பிரதம மந்திரி தினம் தினம் பயந்து கொண்டிருப்பதால் கருணாநிதியிடம் யாரும் இதைச் சொல்லிவிட வேண்டாம்..” என்றம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
வரிவிலக்கிற்கான வருமான உச்சவரம்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய சலுகைகம் அறிவிக்கப்பட்டு உம்ளது.
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான வருமான உச்சவரம்புத்தொகை, மாற்றம் எதுவும் இன்றி கடந்த ஆண்டைப்போல் 1 லட்சத்து 60 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1 லட்சத்து 60 ஆயிரம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை. (பெண்களுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் வரையிலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வரையிலும் வரி செலுத்த வேண்டியது இல்லை.)
அதற்கு மேல் 5 லட்சம்வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டு உள்ளது.
5 லட்சம் முதல் 8 லட்சம்வரை வருமானம் உள்ளவர்கள், 20 சதவீத வரி செலுத்த வேண்டும். தற்போது 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானமுள்ளவர்கள் 20 சதவீத வரி செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
8 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி வசூலிக்கப்படும். இதுவரை 5 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது.
வருமான வரி விகிதப் பட்டியலை கொஞ்சம் அலசுவோம்..!
1. (பொது)
ரூ.1,60,000 வரை இல்லை
ரூ.1,60,001 முதல் ரூ.5,00,000 வரை 10 சதவீதம்
ரூ.5,00,001 முதல் ரூ.8,00,000 வரை 20 சதவீதம்
ரூ.8,00,001 – அதற்குமேல் 30 சதவீதம்
2. (பெண்களுக்கு)
ரூ.1,90,000 வரை இல்லை
ரூ.1,90,001 முதல் ரூ.5,00,000 வரை 10 சதவீதம்
ரூ.5,00,001 முதல் ரூ.8,00,000 வரை 20 சதவீதம்
ரூ.8,00,001 – அதற்குமேல் 30 சதவீதம்
3. (65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்)
ரூ.2,40,000 வரை இல்லை
ரூ.2,40,001 முதல் ரூ.5,00,000 வரை 10 சதவீதம்
ரூ.5,00,001 முதல் ரூ.8,00,000 வரை 20 சதவீதம்
ரூ.8,00,001 – அதற்குமேல் 30 சதவீதம்
சேமிப்புகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு 1 லட்சம்வரை தற்போது வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இனி, இந்தத் தொகையுடன் 20 ஆயிரம் ரூபாய்வரையிலும் முதலீடு செய்யப்படும் நீண்ட கால சேமிப்பு பத்திரங்களுக்கும் இந்த வரிவிலக்கு சலுகை வழங்கப்படும்.
சுகாதார இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான நன்கொடை தொகைக்கு தற்போது அனுமதிக்கப்படுவது போல், மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கும், இனி ஒட்டுமொத்த வரி தள்ளுபடிக்கான உச்சவரம்பில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.
கம்பெனி வரிக்கான கூடுதல் வரி 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. வருமான வரிக்கு கடந்த ஆண்டிலேயே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில், பல்வேறு காரணங்களுக்காக வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிறுவனங்களுக்கு, அதன் லாபத்தில் விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரி, 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
“வருமான வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தினால், வரி செலுத்துவோரில் ஏறத்தாழ 60 சதவீதம்பேர் பயன் அடைவார்கள்..” என்று கழுத்தில் கத்தியைச் சொருகி, சொருகி எடுத்திருக்கும் பிரதான நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.
அவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையில் 4 முதல் 6 சதவீதம்வரை சேமிக்க முடியும் என்று நிதித்துறை நிபுணர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அடுத்த ஆண்டு(2011) ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று நேரடி வரிவிதிப்பு முறை அமலுக்கு வருவதால், வருமான வரி விகிதத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்த சலுகைகள் மகிழ்ச்சி அளித்துள்ளது.
அதே நேரத்தில், கம்பெனி வரி குறைக்கப்பட்டாலும், குறைந்தபட்ச மாற்று வரியை உயர்த்தியதன் மூலம் அந்த சலுகை தட்டிப் பறிக்கப்பட்டிருப்பதாக தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.
8 சதவீதமாக இருந்து வந்த உற்பத்தி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் ரதங்கள் இல்லாமல் சாலைகளில் பயணிக்க முடியாத நமது மேட்டுக்குடி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகப் போகிறார்கள். ரதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தத்தமது ரதங்களின் விலையை 41 ஆயிரம்வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக அறிவித்து உள்ளன.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், தனது ரதங்களின் விலையை ரூ.3,000 முதல் ரூ.13 ஆயிரம்வரை உடனுக்குடன் நேற்று நள்ளிரவு முதலே உயர்த்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது தயாரிப்பு மாடல்களுக்கு ஏற்றபடி, குறைந்தபட்சம் 6,500-ரூபாயில் இருந்து அதிகப்பட்சம் 25 ஆயிரம் ரூபாய்வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா சியேல் நிறுவனம் தனது ரதங்களின் விலையை 13 ஆயிரம் முதல் 41 ஆயிரம்வரை உயர்த்தி பாட்டாளி வர்க்கத்தினரின் வாயிலும், வயிற்றிலும் அடித்துள்ளது..
வால்வோ ஆட்டோ இந்தியா தொழிற்சாலை நிர்வாகமும் தனது ரதங்களின் தயாரிப்புகளின் விலை அதிகரிக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது தயாரிப்பு ரதங்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய்வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் ரதங்களின் நிறுவனத் தலைவர் கார்ல் ஸ்லிம், “மத்திய உற்பத்தி வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதால், ரதங்களின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் ரதங்களின் விலை 6,200 முதல் 22 ஆயிரம்வரை உயர்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், “அரசு உயர்த்தி இருக்கும் வரி உயர்வினை, ரதங்களை வாங்குவோரின் மீதுதான் திணிப்போம்” என்று தைரியமாக கருத்துச் சொல்லியுள்ளார்.
டாடா நிறுவனம் தனது சிறிய ரக ரதங்களின் விலையை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்வரை உயர்த்துகிறது.
போர்டு இந்தியா நிறுவனம் டொயோட்டா நிறுவனத்தின் விலைப் பட்டியலைப் பார்த்த பின்பு தனது விலையை சொல்லப் போவதாக மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.
இரு சக்கர ரதங்களின் விலையும் உயருகிறது. ஹீரோ ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர ரதங்களின் விலையை 500-ல் இருந்து 1,200 ரூபாய்வரை உயர்த்துகிறது. டி.வி.எஸ்.மோட்டார்ஸ் நிறுவனம் 350 முதல் 1,200 ரூபாய்வரை உயர்த்தவுள்ளது.
கனரக ரதங்களின் விலை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம்வரை உயருகிறது.
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. இதேபோல் சில பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டதுபோல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையலாம் என்று தில்லி பாராளுமன்ற அரண்மனையின் வாசலில் அமர்ந்து 60 வருடங்களாக கிளி ஜோஸியம் சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல ஜோதிட ரத்னா ஜோக்கப்பன் தெரிவிக்கிறார்.
கண்டிப்பாக விலை உயரப் போகும் பொருட்கள் இவைகள்தான்..!
பெட்ரோல், டீசல், கார், டி.வி., சிகரெட், புகையிலை, ஏர் கண்டிஷனர்கள், தங்கம், வெள்ளி, இறக்குமதி செய்த வெள்ளி நகைகம், பிளாட்டினம்.
இவற்றின் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம்வரை உயர்த்தப்பட்டு இருப்பதாலும், பொருளாதார நெருக்கடி சீரடைந்து வருவதால் சில பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கச் சலுகைகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாலும் மேற்கண்ட பொருட்களின் விலைகள் நிச்சயமாக உயரே பறக்கவுள்ளன.
தங்க கட்டிகள் மீதான இறக்குமதி வரி 10 கிராமுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், இதர வகையிலான தங்க இறக்குமதியின் மீதான வரி ஒரு கிராமுக்கு 750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இறக்குமதி செய்யும் வெள்ளி ஆபரணங்களுக்கான வரி, ஆயிரம் கிலோவுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
10 கிராம் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதனால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலை உயர்ந்து குடிசைவாழ் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் அவதிப்படப் போகிறார்கள்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில், இதைவிட அதிக விலை வைத்தும் மக்கள் தங்கத்தை அள்ளிக் கொண்டு போனார்கள். எனவே எவ்வளவு விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் தங்கத்தை வாங்கவே செய்வார்கள். இதனால் தங்கத்தின் தேவை குறையவே குறையாது. இருப்பினும், தங்கம் மீதான மூலப்பொரும் வரி குறைக்கப்பட்டுள்ளதால், தங்கத்தை மெருகேற்றும் தொழில் புத்துயிர் பெறும். இதனால், பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் புழக்கம் அதிகரிப்பதுடன், தங்கம் இறக்குமதியும் குறைந்துவிட வாய்ப்பிருப்பதாக தங்க மார்க்கெட்டில் புரோக்கர்கள் தெரிவிக்கின்றனர்..
60 மில்லி மீட்டருக்கும் குறைவான சிகரெட்டுகளைத் தவிர்த்து, அனைத்து வகையான சிகரெட்டுகளுக்கும் உற்பத்தி வரி ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 363 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சுவைக்கும் புகையிலை ரகங்களுக்கான உற்பத்தி வரி 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகரெட், புகையிலை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வீட்டில் இதற்காகப் பணம் திருடும் வாலிபப் பசங்களின் சேட்டைகள் அதிகரித்து ஒவ்வொரு வீட்டிலும் குழப்பங்கள்கூட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வீடு கட்டுவதற்கு அத்தியாவசியத் தேவையான சிமெண்ட் விலையும் உயர்கிறது. 50 கிலோ மூட்டையின் அடிப்படையில் ஒரு டன் சிமெண்டுக்கு 185 முதல் 315 ரூபாய்வரை புதிய உற்பத்தி வரியை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால், ஒரு டன் சிமெண்ட்டின் சில்லறை விலை 40 முதல் 65 ரூபாய்வரை விலை உயரும்.
இதேபோல், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களான மைக்ரோ புராசஸர், பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவகம், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றின் விலையும் உயர்கின்றன. இவற்றுக்கு அளித்து வந்த உற்பத்தி வரி விலக்கு திரும்பப் பெறப்பட்டு இருப்பதுடன் 4 சதவீதம்வரை உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது.
கணினிகள் இருப்பதால்தானே அரண்மனை அங்கத்தினர்களின் சேட்டைகளை சாடுவது முதல், தாத்தா திவாரியின் லீலைகள் வரை வெளியில் தெரிகின்ற காரணத்தால் கணினியை மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தும் நல்ல நோக்கத்துடன் இது செய்யப்பட்டிருப்பதாக ரகசியமாக அன்று இரவு நடந்தேறிய அரண்மனை அங்கத்தினர்கள் கூட்டத்தில் பிரதான நிதியமைச்சர் போதையில் உளறியதாக ஒற்றர் படை தகவல் நமக்குத் தெரிவிக்கிறது.
குளிர் கண்ணாடிகள் மீது 10 சதவீதம்வரை உற்பத்தி வரி விதிக்கப்பட்டு உள்ளதால் இவற்றின் விலையும் அதிகரிக்கிறது.
சேவை வரி விதிப்பு காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்கின்றன. இதுவரை அயல்நாட்டு விமானப் பயணங்களில், முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்புகளுக்குத்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. தற்போது அனைத்து வகை விமானப் பயணங்களுக்கும் சேவை வரி விதிக்க திட்டமிட்டிருப்பதால், உள்நாட்டு, சர்வதேச விமான பயணக் கட்டணம் உயரே பறக்க, பறக்கப் போகிறது.
சேவை வரியின் கீழ் மின் உபயோகம் வருவதால் மின்கட்டணமும் உயரும்.
தொழில் நிறுவனங்களில் சம்பளம் பெறுவோர் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்வது சேவை வரியின் கீழ் வருவதால் இதற்கான செலவும் அதிகரிக்கிறது. இது தவிர, மருத்துவ இன்சூரன்சு திட்டங்களும் சுகாதார சேவையின் கீழ் வருவதால், இவற்றுக்கும் சேவை வரி உண்டு.
ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவுகள் மீதான காப்பி ரைட்டுகள் மீதும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடகம், இதர கலைப் படைப்புகளுக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
விலைகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படும் பொருட்களின் பட்டியல்..!
இந்தியாவில் தயாராகும் மொபைல் போன்கள், மொபைல்போன் உதிரி பாகங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், மடிப்பு ஜவுளி பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், மென்தா எண்ணை, நீள மிளகு, பெப்பர் மின்ட், மருத்துவத் துறையில் பயன்படும் சி.இ.எல். விளக்குகள், செட்டாப் பாக்ஸ்கள், காம்பாக்ட் டிஸ்க்குகள், விளையாட்டு பலூன்கள், லேட்டெக்ஸ் ரப்பர் இழை, அட்டை பெட்டிகள், போன்றவற்றின் விலை குறைந்து மக்கள் இவற்றையெல்லாம் வேளாவேளைக்கு சாப்பிட்டு தங்களது வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டு சுகமாக வாழ இருப்பதாக நிதியமைச்சர் பொங்கி வந்த புன்சிரிப்போடு அவையில் தெரிவித்துள்ளார்.
வாட்டர் பில்டர்கள், லேட்டெக்ஸ் ரப்பர் இழை, அட்டை பெட்டிகள், ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை கணிசமாக குறையும்.
விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. உரிய காலத்தில் பயிர்க் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இந்த வட்டியையும் செலுத்த முடியாத அளவுக்கு வறுமையில் இருக்கும் விவசாயிகள் தாராளமாக தற்கொலை செய்து கொள்ளலாம் எனவும், அவர்களை அடக்கம் செய்யும் செலவினை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று நிதியமைச்சர் பலத்த புன்சிரிப்புடன் தெரிவித்தார்.
நாட்டின் படை வீரர்களின் நலனுக்கும், படைகளுக்கும் சேர்த்து 1 லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோல அரண்மனை பங்குதாரர்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் வாழ்வளிக்கும் அத்தியாவசிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 552 கோடியும், சமூக நலத்திட்டப் பணிகளுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 674 கோடியும் ஒதுக்கப்பட்டு அவர்களுடைய நலன் பேணி காக்கப்பட்டிருப்பதாக அறிவித்தபோது அரண்மனைக்குள் இருந்த புண்ணியவான்கள் கைகளைத் தட்டியத் தட்டில் பாரத தேசத்திற்கு தென்மேற்கே தொலைதூரத்தில் இருக்கும் சிலி என்னும் நமது நட்பு நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு 300 பேர் பலியாகியிருப்பதாக புறாச்செய்தி வந்துள்ளது.
புதிய பென்சன் திட்ட உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு ஆண்டுக்கு 1,000 ரூபாயை அரசு மறைமுக லஞ்சமாகக் கொடுக்க உள்ளது.
குடிசை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு 1,270 கோடியும், அமைப்பு சாரா தொழிலாளர் பாதுகாப்புக்கு 1,000 கோடியும், சிறுபான்மையினர் நலத்துக்கு 2,600 கோடியும், சமூக நீதித்துறைக்கு 4,500 கோடியும், மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறைக்கு 22,300 கோடியும், கிராமபுற வளர்ச்சிக்கு 66,100 கோடியும், பள்ளிக்கூட கல்விக்கு 31,036 கோடியும், மின் உற்பத்திக்கு 5,130 கோடியும், சிறுதொழில் வளர்ச்சிக்கு 2,400 கோடியும் ஒதுக்கப்பட்டு தாழ்ந்த நிலையில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும், நமது சேனைத் தளபதிகளின் வாழ்க்கைக்கும் வழிகாட்டப்பட்டிருக்கிறது.
புகைவண்டி ரதத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 16,752 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு 5,400 கோடியும், மலைப்பகுதிகளில் பழங்குடி மக்களின் பெயரைச் சொல்லி சப்தமில்லாமல் சாப்பிட்டுக் கொள்ளும்படி இந்திரா ஐவாஸ் யோசனா திட்டத்தின் மூலம் 48,500 கோடியும், உள்பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கு 45 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரண்மனை அங்கத்தினர்களின் வயிற்றில் லிட்டர் லிட்டராக சோமபானம் வார்க்கப்பட்டிருக்கிறது.
கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்துக்கு 40,100 கோடியும், கிராமப்புற மக்களின் சுகாதார வசதிக்கு ரூ.2,766 கோடியும், மத்திய போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு 19,894 கோடியும், மத்திய நீர்வளத்துறை மேம்பாட்டுக்கு 1,105 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஆண்டுக்கு 45 ஆயிரத்து 571 கோடி நஷ்டத்தை சந்தித்து வருவதாக நிதியமைச்சர் கண்ணீர்மல்க அழுது புலம்பினார். .
பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயிப்பதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு 100 ரூபாயும், மண்எண்ணை விலையை 6 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்றும் அரசருக்கு அறிஞர்கள் குழு சிபாரிசு செய்திருந்ததை சுட்டிக் காட்டினார் நிதியமைச்சர்
இதனால் தற்போது, பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி, 2.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்கள் மீதான உற்பத்தி வரி, லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது மறைமுக வரிகள் என்பதால், உடனடியாக அமலுக்கு வருவதாக முகம் முழுவதையும் அறிக்கையால் மறைத்துக் கொண்டு பாதுகாப்பான வகையில் நின்றபடியே தெரிவித்தார் நிதியமைச்சர்.
நிதியமைச்சரின் இந்தக் கொள்ளை அறிவிப்பு தொல்லைக்காட்சிகளின் மூலமாக நாடு முழுவதும் நொடியில் பரவ.. நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு முதல் ரதங்களை ஓட்ட உதவும் எரிபொருளின் விலை உயர்த்தப்படவிருப்பதால் உடனேயே முடிந்தவரையில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள நினைத்த அப்பாவி ஜனங்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கிப் படையெடுக்க நாட்டில் அனைத்து எரிபொருள் நிலையங்களும் அப்போதிலிருந்து இரவுவரையிலும் எரிந்து கொண்டேயிருந்தன.
இதில் சில நல்லதொரு தேச பக்தர்கள் ஸ்டாக் இல்லை என்று போர்டு எழுதி வைத்துவிட்டு கயிறு கட்டி கடையை மூடிவிட்டார்கள். இருக்கின்ற ஸ்டாக்கை நள்ளிரவுக்குப் பிறகு விற்றால் நன்றாக கல்லா கட்டலாமே என்று நினைத்து அவர்கள் கட்டையைப் போட அவர்கள் தலையில் எதையும் போட இயலாத அப்பாவி பொதுஜனம் அவர்களால் முடிந்தபடிக்கு வைந்து கொண்டே நகர்ந்தது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அன்றைய நள்ளிரவு முதலே அமலுக்கு வந்த இந்த விலையுயர்வின்படி தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 71 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசுகளும் உயர்த்தப்பட்டன. இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.47.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35.42 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில், பெட்ரோல் விலை ரூ.48.58-ல் இருந்து ரூ.51.59 ஆகவும், (உயர்வு ரூ.3.01) டீசல் விலை ரூ.34.98-ல் இருந்து ரூ.37.78 ஆகவும், (உயர்வு ரூ.2.80) உயர்ந்தது.
இது குறித்து மேலும் ஒரு சோடாவைக் குடித்துவிட்டு பேசிய அமைச்சர் பிரதானி பிரணாப்முகர்ஜி, “கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 122 டாலராக இருந்தது. எனவே, கச்சா எண்ணை மீதான சுங்க வரி வாபஸ் பெறப்பட்டது. அதற்கேற்றாற்போல், பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது கச்சா எண்ணை விலை குறைவாகவே இருப்பதால், அதே சலுகையை தொடர வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான், வரியை உயர்த்தினேன்.
இதற்கு முன்பு விதிக்கப்படாத எந்த வரியையும் நான் புதிதாக விதித்து விடவில்லை. நிபுணர் குழு சிபாரிசை அமல்படுத்தாமலேயே, வரி உயர்வு மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் சிபாரிசுகளை அமல்படுத்தினால், பெட்ரோல் விலையை மேலும் 5 ரூபாயும், டீசல் விலையை மேலும் 3 ரூபாயும் உயர்த்த வேண்டியிருக்கும்.. ஆனால் நாட்டு மக்களுக்காக நான் அதனைச் செய்யவில்லை..” என்று சொல்லி உடல் குலுங்கி சரியாக 2 நிமிடம் 49 நொடிகள்வரையிலும் அவர் அழுதது அரண்மனை அங்கத்தினர்கள் அனைவரையும் பதற வைத்துவிட்டது.
ஆனாலும் இப்போதைய உயர்வுகளை ஏழை, எளிய மக்கள் எத்தனைபேர் தாங்கிக் கொண்டு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை புள்ளிவிவரம் மூலம் தெரிந்து கொண்டு பின்பு மக்கள் தொகைக்கேற்ப அமல்படுத்தலாம் என்று அமைச்சரவை ரகசிய முடிவெடுத்திருப்பதாக புறாச்செய்தி நமக்கு மட்டும் தெரிவிக்கிறது.
இதுபற்றி அந்தத் துறையின் பிரதானி முரளி தியோரா கூறுகையில், “நிபுணர் குழு சிபாரிசை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும். இதுதொடர்பாக, பலரை நான் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.19 ஆயிரத்து 800 கோடி நஷ்டஈடு அளிக்குமாறு நிதி அமைச்சகத்தை தொடர்ந்து வற்புறுத்துவேன்” என்றும் குறிப்பிட்ட பிரதானி, “நாட்டில் அனைத்து கிராமங்களிலும் உடனுக்குடன் சடலங்களை எரிக்கும் மின் மயானங்கள் அமைக்கின்றவரையில் இப்படி விட்டுவிட்டுத்தான் மக்களை கொல்ல வேண்டியிருக்கிறது..” என்று ரகசியமாக ஆஃப் தி ரிக்கார்டாக பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடியே தெரிவித்தார்..
9 சதவீத பொருளாதார வளர்ச்சியை வேகமாக எட்டுதல், நிதி நிலைமையை பலப்படுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுதல் ஆகிய 3 அம்சங்களை கவனத்தில்கொண்டுதான் பட்ஜெட் தயாரித்துள்ளதாக பிரதானி நிதியமைச்சர் கதைவிடுகிறார். ஆனால் உண்மையான காரணம் என்னவெனில் இந்த வருடம் முடியவும் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் தேர்தலும், மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வராத சூழல் இருப்பதுதான். இதனால்தான் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களிடம் இருக்கின்ற கோவணத்தை இழுத்துப் பார்த்துவிடுவோம் என்று மகா துணிச்சலுடன் முடிவு செய்து நிதிநிலையறிக்கையில் அதனைச் செயல்படுத்தியிருப்பதாக தலைநகரில் இருக்கும் நமது ஒற்றர் படையினர் தெரிவிக்கின்றனர்.
எப்போதும் ஓசியில் பினாயிலைக் கொடுத்தால்கூட வாங்கிக் கொள்ளும் அரசியல்வியாதிகள் மத்தியில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருட பட்ஜெட்டில் நடந்திருக்கும் ஒரு செயல்தான் கொஞ்சம் ஆச்சரியத்தைக் கிளப்பியிருக்கிறது.
அதாகப்பட்டது என்னவெனில் இந்த பட்ஜெட்டில், ஜனாதிபதியின் சம்பளத்தை பாதியாக குறைத்தது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஜனாதிபதி மாளிகைக்கு ரூ.27 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பட்ஜெட்டில், ரூ.29 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்ளது. இது கடந்த ஆண்டை விட 9.93 சதவீதம் அதிகம்.
ஜனாதிபதி செயலகத்தின் அலுவலகச் செலவுகள், ஊழியர்களின் சம்பளம், வீட்டுச் செலவுகள், வாகன கொள்முதல் செலவுகள் போன்ற வகையில், இந்த நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளதாக நிதியமைச்சரும் சமாளித்திருக்கிறார்..
ஆனால், ஜனாதிபதியின் சம்பளமும் அவரது மறைமுகமான சம்பாதிப்புகளும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு, இந்த வகையில் 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
பாதிக்குப் பாதியாக குறைக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்தால் ஒரு பெண் ஜனாதிபதியாக இருப்பதினால் கொழுப்பெடுத்த ஆண் பிரதமரும், ஆண் மந்திரிகளும் ஒன்று சேர்ந்து மரியாதையைத்தான் கொடுத்துத் தொலைய வேண்டியிருக்கிறது. இதிலாவது கை வைப்போம் என்று சொல்லி குறைத்துவிட்டார்களோ என்னவோ..?
பாவம்.. இம்புட்டுச் சம்பளம் வாங்குற மனைவியோட புருஷன் நான்னு அந்தம்மாவோ ஹஸ்பெண்ட் நாடெல்லாம் சுத்திச்சுத்தி வந்துக்கிட்டிருந்தாரு.. சக ஆண் ஒருவரின் பொழைப்பில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டார்களே இந்தப் ஆண்பாவிகள்..!
ஆனால் நமது தலைநகர் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்களெனில், தற்போதைய ஜனாதிபதி மூன்றாண்டுகளுக்கு முன்பாக சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்தபோதே மனைவியின் பெயரை வைத்து ஏக்கர், ஏக்கரா சுருட்டியிருக்காரு அந்தம்மா வூட்டுக்காரரு.. இப்ப அந்த வூட்டுக்குன்னு கொடுத்திருக்குற 29 கோடியில எம்புட்டு சுருட்டுவாருன்னு யாருக்குத் தெரியும்..? கொள்ளையடிக்கிறவன் எப்படியும் கொள்ளையடிக்கத்தான் செய்வான்..? அதுனாலதான் சம்பளத்தை பாதியா குறைச்சு இதுல கொஞ்சம் ஏத்திக் கொடுத்திட்டாங்களாம். இனிமே அவர் கண்டிப்பா சுருட்டியே ஆகணும் பாருங்க..! எவ்ளோ அறிவாளிக நம்ம அரசியல்வியாதிங்க..!
பட்ஜெட்டை தாக்கல் செய்ததோட நம்ம கடமை முடிஞ்சிருச்சுன்னு பாராளுமன்றத்தை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைச்சிட்டு எஸ்கேப்பாயிட்டாங்க நம்மாளுக.. இருந்தா கூச்சல் போட்டு மானத்தை கப்பலேத்திருவாங்கன்னு போயிட்டாங்க..
இங்க பெட்ரோலையும், டீசலையும் விலை ஏத்தினதால தனியார் பஸ் கம்பெனிக்காரங்களும், லாரி உரிமையாளர்களும் சப்தமில்லாமல் தங்களோட கட்டணத்தையும் உயர்த்திட்டாங்க. இதுனால லாரி கொண்டு வர்ற காய்கறிகளோட விலையும் உயர்ந்து, ஏற்கெனவே பரமபதம் ஆடிக்கிட்டிருந்த விலைவாசி இன்னும் கொஞ்சம் உசந்திருச்சு..
இதெல்லாம் யாருக்கு பிரச்சினை..? அரசியல்வியாதிகளுக்குத்தான் ஒண்ணுமே இல்லையே.. நமக்குத்தான.. அதான் அவங்களே சொல்லிட்டாங்களே சர்க்கரை சாப்பிடலைன்னா மக்கள் ஒண்ணும் செத்திர மாட்டாங்கன்னு.. இதைக் கேட்டுட்டும் நாம சூடு, சொரணையில்லாம இருக்கிறோம்..
தவிட்டுக்கும், புண்ணாக்குக்கும் விலையைக் குறைச்சது எதுக்கு தெரியுமா..? இதுக்குத்தான்.. இனிமே இதுவரைக்கும் சாப்பிட்டதையெல்லாம் விட்டுப்போட்டு, இனிமே தவிட்டையும், புண்ணாக்கையும் சாப்பிட்ட ஆரம்பிச்சோம்னா, செலவுக்கு செலவும் மிச்சமாகும். சூட்டையும், சொரணையையும் பத்தியும் யோசிக்கவே வேணாம்..! என்ன நான் சொல்றது..?
குறிப்பு : பொறுமையாகப் படித்து முடித்தவர்கள் மட்டுமே நிஜமான இந்தியக் குடிமகன்கள் என்றும் பாதியிலேயே எஸ்கேப்பானவர்கள் இந்திய தேசியத்தின் எதிரிகள் என்றும், கருத்துச் சொல்லாமல் செல்பவர்கள் நாட்டுப் பற்றே இல்லாதவர்கள் என்றும் சபிக்கப்பட உள்ளார்கள்..!