May 31, 2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே,
நோயற்ற வாழ்க்கை ஒரு மனிதனுக்குக் கிடைத்தது என்றால் அவன் நிச்சயமாக பாக்கியசாலிதான். நோய் எதனால் உண்டாகிறது என்றால் உடலின் ஏதோ ஒரு உறுப்புக்கு ஒவ்வாத ஒன்றை மனிதன் தன்னுள் திணித்திருக்கிறான். அல்லது திணிப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறான் என்று சொல்லலாம்.
மரணங்கள் இல்லங்கள் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதே போல் பிறப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு வித்தியாசம்தான். பிறப்பின்போது வீடு முழுவதும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. ஆனால் மரணத்தின்போது அந்த வீட்டையே துக்கம் சூழ்ந்திருக்கிறது. மரணத்தை வெல்வது சாத்தியமில்லை என்றாலும், அதை முடிந்தபட்சம் தவிர்க்கலாம்.
ஆண்டு தோறும் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அதில் புகையிலை என்னும் கொடிய வஸ்துவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இரண்டாமிடம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் கூடிக் கொண்டே செல்வதாகவும் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.
புகையிலை என்னும் ஆள் விழுங்கும் வஸ்து பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகை பிடிக்கும் முறையிலும், மென்று முழுங்கும் வகையிலும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் 10 ஆண்டுகளாக நான் வசித்து வந்தாலும், எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக மிக குறைவு. என் வீட்டிற்கு தற்போது கடன்காரர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. நான்தான் நண்பர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். காரணம் வெரி சிம்பிள். எனக்குப் புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருக்கும் மீடியா துறையில், இது இரண்டும்தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு ஆக்ஸிஜன்.
நான் பேச்சிலராகவும் இருப்பதால் வீட்டுக்கு வரும் நண்பர்கள் “சிகரெட் பிடிக்கலாமா..?” என்பார்கள். நான், “வீட்டின் உள்ளே வேண்டாமே..” என்று மறுதலித்ததும், வாசலில் நின்று பிடிப்பார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பறந்துவிடுவார்கள். தொடர்ந்து நான்தான் அவர்களைத் தேடி ஓடுவேன். இப்படித்தான் எனது பத்தாண்டு கால சென்னை வாழ்க்கையில், நண்பர்களைத் தேடும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
முதலில் ஆண்கள் என்றாலே அவர்கள் கையில் சிகரெட்டுடன் இருந்தால்தான் அது அவர்களுக்கு கவுரவம், மரியாதை என்ற ரீதியில் இந்த சிகரெட் என்னும் போதையை நம் இளைஞர்கள் மத்தியில் புகுத்திவிட்டார்கள்.
போதாக்குறைக்கு அவர்களுடைய ‘திரையுலகத் தெய்வங்கள்’ முதல் காட்சியிலேயே சிகரெட்டை ஸ்டைலாக உதட்டோரமாக வைத்து கை தட்டலுடன் தோன்ற, அந்தப் பழக்கம் அப்படியே விசிலடிச்சான் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கும் நமது இளைஞர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்த சினிமா, தனி நபர் மயக்கத்திலிருந்து அவர்கள் விடுபட குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆனாலும்கூட, அதற்குப் பின்னும் அந்த போதை அவர்களை விடாது. அல்லது இவர்களும் அதை விடுவதில்லை. அது அவர்களின் ஸ்டேட்டஸை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவே இப்போது மாறிவிடுகிறது.
சமீப ஆண்டுகளாக பெண்களும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. சென்னையில் சத்யம் தியேட்டர் வளாகம், ஸ்பென்ஸர் பிளாஸா என்று பொருளாதார நுகர்வு அதிகமுள்ள இடங்களில் இது மாதிரியான பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கின்ற அனைவருக்கும் இது டேக் இட் ஈஸியாக தோன்றுகிறது.
இது அவர்கள் உயிர்வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் குறைத்துக் கொண்டே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா? தெரியும். கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தும் ஏன் அதைப் பிடிக்கிறார்கள். வேறென்ன போதைதான்.. விட முடியவில்லை என்பார்கள்.
நிகோடின், பென்சோபைரின் போன்ற புற்று நோயை உருவாக்கக்கூடிய நச்சுப் பொருட்கள்தான் இந்தப் புகையிலையில் உள்ளன. புகைப்பிடிக்கும்போது புகையுடன் சேர்த்து இந்த நச்சுப் பொருட்களும் புகைப்பவரின் ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்பட்டு புற்று நோய் ஏற்படுகிறது.
நகர்ப் பகுதியில் இருப்பவர்களும், படித்தவர்களுமே மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் புகை பிடிக்கும்போது, கிராமப் புறங்களில் புகையிலையை மெல்லும் மக்களை என்னவென்று சொல்வது?
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை என்பது நமது கிராமப் புறங்களில் தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து வரும் ஒரு கலாச்சாரமாக இருந்து வருகிறது.
சுக்குமல்லி காபியும், கஷாயமும், நீராகாரமும், காபித்தண்ணி என்ற பால் இல்லாத காபியும் மணக்கும் கிராமப் பகுதிகளில், இந்த புகையிலை என்னும் அரக்கனும் கோலோச்சிக் கொண்டிருக்கிறான்.
கிராமங்களில் வாழும் மக்களில் அநேகம்பேர் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதால், இதனால் வரக்கூடிய தீமைகளை அதிகம் அறிந்தவர்களாக இல்லை. அப்படியே ஊரில் ஒருவருக்கு இந்த நோய் வந்து அவர் இறந்ததை கண்ணார பார்த்திருந்தும்கூட இதை விட முடியாமல் தவிக்கிறார்கள். அதற்கான மன தைரியத்தையும், மனத் தெளிவையும் தரக்கூடிய அளவுக்கு அவரது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் கல்வி கற்றவர்களாக இல்லாததால், இவர்களும் பின்னாளில் அதே நோய்க்கு பலியாகிறார்கள்.
நமது மத்திய அரசும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் புகையிலைப் பொருட்களுக்கு வரி அதிகமாக விதித்தாலும்கூட, சிகரெட், புகையிலை விற்பனை குறையவில்லை. எந்த விலையைக் கொடுத்தாவது வாங்கிப் புகைக்கின்றனர். உலகமயமாக்கல் காரணமாக எது எது ஏழை நாடுகளைப் பாதிக்கக்கூடாதோ, அதுவெல்லாம் இப்போது வளர்ந்து வரும், மற்றும் வளர்ந்த நாடுகளையும் பாதிக்கத் துவங்கிவிட்டது. அதன் முதல்படிதான் இந்த புகையிலை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரிப்பது.
இந்தக் கொடிய புகையிலையை மெல்லுவது, சுவைப்பது, புகைப்பது ஆகிய காரணங்களால் உலகில் ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் புகைக்குப் பலியாகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்து நீடித்தால் வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் பலியாகக் கூடிய நிலைமை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகரித்துள்ள போதிலும், பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை, பீடி, சிகரெட் விளம்பரங்களுக்குத் தடை என்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. கூடிக் கொண்டேதான் செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் 65 கோடி பேர் புகைக்கின்றனர். இவர்கள் அனைவருமே புகையிலையால் புஸ்வாணமாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கென்ன வழி? சிறு வயதிலிருந்தே அதாவது பள்ளிப் பருவத்திலிருந்தே இது போன்ற போதைப் பொருட்களை, நமது குழந்தைகளிடமிருந்து நாம் தள்ளியே வைக்க வேண்டும். எத்தனை வீடுகளில் இதைப் பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள்? வீட்டின் உள்ளேயே குழந்தைகள் முன்பாகவே சிகரெட் பிடிக்கும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். அது குழந்தைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் அறிவதில்லை.
இன்னும் சில பேர் சிகரெட், பீடி முதலியவைகளை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வாங்கி வரச் சொல்கிறார்கள். இப்படி பழக்கமான பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வருவார்கள்? அதே பழக்கம் அவர்களையும் தொற்றும்தானே..
குழந்தைகளிடமிருந்து இந்த போதைகளை நாம் விலக்கியே வைக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை பெரியவர்களாகிய நாம் பார்க்கச் செல்லும்போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் இப்படியரு கொடுமைக்கு நாம் ஆளாக நேரிடுமே என்ற பய உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.
இது போதாது என்று பலரும் புகை பிடிக்கும்போது அதை அருகிலிருந்து சுவாசிப்போருக்கும் புகையிலை தொடர்பான நோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தவர் புகையால் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதால் – சிகரெட் புகையை சுவாசிக்காமல் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால்தான் பல்வேறு நாடுகளிலும் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதற்கு ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது புகைப்பதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை புகை பிடிப்பவர்கள்கூட வரவேற்றுள்ளனர். புகை இல்லாத சூழ்நிலையில் பழக்கப்படும்போது, புகை பிடிப்பவர்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்க வாய்ப்புண்டு.
இந்த அரசுகளும் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக புகையிலையை ஆரம்பத்தில் வளர்த்தார்கள். நிறைய வரி கிடைக்கிறதே என்றெண்ணி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காமல் குடிசைத் தொழில் போல் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தவர்கள், எல்லாம் கையை மீறிப் போனவுடன் இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
புகையிலை மற்றும் சிகரெட்டினால் வரும் வரி வருவாய், இந்திய அரசின் பட்ஜெட்டில் கணிசமான அளவைக் கொண்டிருப்பதால் அவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய முடியாத சூழ்நிலையில் அரசு இருக்கிறது. ஆனால் அதே நேரம் இதே புகையிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகும் சிகிச்சைக்கான செலவும் இதே அளவுதான் ஆகிறது. வேறென்ன செய்வார்கள் ஆட்சியாளர்கள்?
“வரவுக்கும், செலவுக்கும் சரியாப் போச்சு…” என்று சொல்லி தேய்ந்து போன ரிக்கார்டாக வருடாவருடம் பட்ஜெட்டின்போது கிளிசரின் போடாமலேயே அழுத நிலையில் பேசுகிறார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நடிப்பும் காணாமல் போய்விடும். அடுத்த நடிப்பு அடுத்த பட்ஜெட்டின் போதுதான்..
புகையிலையால் பாதிக்கப்பட்டு மரணமடையும் நபரின் குடும்பம் எந்தளவுக்குத் துன்பப்படும் என்பதை அவரவர் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
இந்த உண்மைத்தமிழன் ஏன் இவ்வளவு உருகி, உருகி எழுதுகிறான் என்றால் அவனும் இப்படியரு கொடுமையான அனுபவத்தைப் பெற்றவன்தான். அதிலும் அவனுடைய வாலிப வயதில் பார்க்கக் கூடாத கொடுமைகளை இந்தப் புகையிலை என்னும் அரக்கன் அவனது தந்தையின் மூலமாகக் காட்டிவிட்டான். அந்த அனுபவத்தால்தான் சொல்கிறான்.. தயவு செய்து.. தயவு செய்து.. புகையிலையைத் தவிருங்கள்..
வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அது முடிகின்றபோது தானாக முடியட்டும். நாமே அதைத் தேடிச் சென்று அடைய வேண்டாம்..
புகை பிடிக்கும் பழக்கமுள்ள வலைப்பதிவர்கள் அதைக் கைவிட உண்மைத்தமிழனின் சில உருப்படியான(!) யோசனைகள்
1. எப்போதும் வீடு அல்லது அலுவலகத்திற்குள்ளேயே இருக்கவும். வெளியே வர முயற்சிக்க வேண்டாம்.
2. எப்பொழுதும் சட்டைப் பாக்கெட்டில் குடும்பத்தினரின் சிறிய புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
3. அலுவலகத்திலும் ஒரு புகைப்படத்தை பிரேம் செய்து கண் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்கள்கூட பேரன், பேத்திகளை பார்க்க வேண்டுமே என்ற வைராக்கியத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
4. குச்சி மிட்டாய் அல்லது இஞ்சி மிட்டாய் அல்லது TITBITS அல்லது சூரி மிட்டாய் இவைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து முழுங்கி விடுங்கள்.
5. புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள உங்களுடைய மாம்ஸ்கள், மச்சான்கள், மாப்பிள்ளைகள் வந்தால் நீங்கள் ‘இல்லை’ என்று சொல்லச் சொல்லிப் பழகுங்கள்.
6. அப்படியும் வெளியில் செல்லும்போது மாட்டிக் கொண்டால் “எனக்கு சிகரெட் பிடித்தவுடன், ஒட்டக பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும். வாங்கித் தர்றியா மாம்ஸ்..?” என்று கேளுங்கள். உங்களது ‘மாம்ஸ்’ ஒட்டகம் பாணியிலேயே தவ்வித் தவ்வி ஓடி விடுவார்.
7. வலையுலகில் கொள்கை ரீதியான எதிரிகளை நிறைய சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைப் பற்றி நிறைய புலம்பல்களும் இடுகைகளும் வரும். தொடர்ந்து அதற்குப் பதிலளித்துக் கொண்டே இருக்கலாம். புகை பிடிக்க நேரம் இல்லாமல் போனாலும் போகலாம்.))))
8. குளிக்கும் நேரம், பாத்ரூம் செல்லும் நேரம், அலுவலக நேரம், சாப்பிடும் நேரம்.. இவை போக மீதி நேரமெல்லாம் தமிழ்மணத்தை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவாச்சும் வெறுமனே பார்த்துக் கொண்டாவது இருங்கள். புகை பிடிப்பது நாளடைவில் மறந்து விடும்.)))))
9. கவிதைகளைப் பிடிக்காதவர்கள் தப்பித் தவறிக்கூட கவிதைகள் பக்கம் போக வேண்டாம். அதேபோல் கட்டுரைகளைப் பிடிக்காது கவிதைகளைச் சுவாசிப்பவர்கள் கட்டுரைகளின் பக்கமே செல்ல வேண்டாம். இரண்டுமே கடைசியில் டென்ஷனில் கொண்டு போய் முடிந்து சிகரெட்டை தொட வைத்துவிடும்.
10. 2077-ம் ஆண்டு மே-31ம் தேதி சென்னை நடேசன் முதலியார் பார்க்கில் நடைபெறவிருக்கும் 300-வது வலைத்தமிழர்களின் மாநாட்டின்போது உண்மைத்தமிழன் அதுவரை தான் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுவதையும் வலையுலகப் பதிவர்கள் சங்கத்தில் பதிவு பெற்ற பதிவர்கள் அனவருக்கும் சம பங்காகப் பிரித்துத் தர எண்ணியுள்ளான். அன்றுவரை இருந்து எனக்குரிய பங்கை வாங்கித்தான் தீருவேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். புகையிலை வஸ்துவை நாட மனசு வரவே வராது.)))))
வாழ்க வளமுடன்