03-09-2007
அன்புள்ள திரு.டோண்டு ஸாருக்கு,
வணக்கம்.
வரைமுறை இல்லாமல், காரணமே இல்லாமல் அடுத்தவரைக் கண்மூடித்தனமாக நேரில் தாக்குபவரும், எழுத்தால் தாக்குபவரும், ஆபாச அர்ச்சனைகள் புரிவோரும் கண்டிப்பாகத் தண்டிக்கப்படக் கூடியவர்தான். சந்தேகமில்லை..
அதே சமயம், அந்த வரைமுறையற்ற தாக்குதல் நடத்துபவனை வம்பு சண்டைக்கு இழுத்து “பார்.. பார்.. என்னிடம் சண்டைக்கு வருகிறான்” என்று ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பவரும்கூட ஒரு வகையில் தண்டிக்கப்படக் கூடியவர்தான்..
இந்தப் போலி பிரச்சினைக்கே யார் முதற் காரணம்? நீங்கள்தான்..
உங்களுடைய எழுத்தால் ஒருவன் மனம் பாதிக்கப்படும் அளவுக்குச் சென்று இன்று மதுரைவீரன் சாமிக்கு படையல் வைப்பதைப் போல் எழுத்தில் வடித்துக் கொண்டிருக்கிறான்.
அது அவனது தலையெழுத்து என்று நீங்கள் சொன்னீர்களானால் இந்த நிகழ்வு உங்களை உடன் காரணியாக வைத்து அவனது விதியின் பெயரால் அமைந்தது. மகரநெடுங்குழைநாதனின் தீவிர பக்தரான உங்களுக்கு இது நன்றாகவே புரியும். இந்த நபரை நோயாளியாக்கியதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. இதை விதியின் விளையாட்டு என்றோ, நீங்கள் வணங்கும் கடவுளின் விளையாட்டு என்றோ நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அதுவும் சரிதான்.
இன்றைக்கு அந்த நபர் மீது வலையுலகமே பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவருக்கு என்ன ஆனதோ? ஏன் இப்படி.. நாமெல்லாம் சரியானபடி இருக்கும்போது இவருக்கு மட்டும் இப்படியரு நிலையா என்றுதான்.. இது ஒருவகை பரிதாப உணர்ச்சி. வேறு என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?
பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நீங்களே முதலில் சமாதானம் செய்து பின்பு அது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மறுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதைப் போல் எழுத ஆரம்பித்து இதனால் போலியும் தனது சத்தியத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து இதனால் பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல.. நாங்களும்தான்..
தினமும் காலையில் மெயிலை திறக்கும்போது அக்கம்பக்கம் யாரும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்றெண்ணி யோசனை செய்யும்போது எங்களுக்கு வரும் கோபம் எங்களுக்குத்தான் தெரியும்..
நான் முன்பே உங்களிடம் ஒரு முறை சொன்னேன்.. “உங்களது வலைத்தளத்தில் ஒரு விட்ஜெட் தயாரித்து வையுங்கள். எனது வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே எனது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை…” என்று சொல்லி எழுதி வைக்கும்படி சொன்னேன்.
அதற்கு நீங்கள், “முடியாது..” என்றீர்கள். புதிதாக “வலையுலகில் நுழைபவர்களுக்கு உங்களைப் பற்றியும் தெரியாது.. வலையுலக அரசியலைப் பற்றியும் தெரியாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் பின்னால் எழுத வந்ததற்கே வருத்தப்படுவார்கள்..” என்றேன். “அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.. எனக்கு கமெண்ட்ஸ் வந்தால் நான் பதில் போடுவேன்.. அவ்வளவே..” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டீர்கள்.
இப்போதும் இதையே உங்கள் முன் வைக்கிறேன். புதிதாக வலைத்தளத்திற்குள் வருபவர்களோ ஓய்வு நேரத்தில்தான் எழுதுகிறார்கள். அந்தப் பொன்னான நேரத்தை இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களில் செலுத்துவதற்கு நாம் உதவிடக்கூடாது.
உங்களுக்கு கமெண்ட்ஸ் போட்ட பாவத்திற்கு அவர்கள் குடும்பத்தினர் மனக்கஷ்டம் அடைய வேண்டுமா? யோசித்துப் பாருங்கள்..
இது ஒன்றும் யுத்த களம் அல்ல. குடும்பம் நடத்துகின்ற இல்லம். உங்களுடைய யோம்கீத்பூரோ, யோம்கீத்துபுரோவோ எதுவாக இருந்தாலும் உங்களுடைய வீட்டோடு வைத்துக் கொள்ளுங்களேன்.. அதற்கெதற்கு தேவையில்லாமல் எங்களை இழுக்குறீர்கள்..?
இப்போதுதான் போலியை வெளிப்படுத்தி உலகத்திற்கு அடையாளம் காட்டி முடித்திருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதுவரையிலும் உங்களுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு போலியின் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.
மேலும், மேலும் புதிய புதிய பதிவர்கள் உள்ளே வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தயங்கி நிற்கிறார்கள். யார் எந்தப் பக்கம்? யாருடைய பதிவு பிரச்சினையில்லாதது என்றெல்லாம் யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
இது, தமிழ் மொழி இல்லாத நாடில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நேரம் செலவழித்து எழுதிக் கொண்டிருக்கும் நம் வலைச் சமுதாயத்திற்கு நல்லதல்ல.
இதுதான் நீங்களும் உங்களுடைய பிடிவாதத்தைக் கைவிட வேண்டிய தருணம்.
நீங்கள் மேற் சொன்னதுபோல் விட்ஜெட்டை உங்களது தளத்தில் போடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில் நான் எனது தளத்தில் நிச்சயம் இடுவேன்..
ஏனெனில் உங்களால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
இப்போது யோசித்துப் பார்த்தால் யார், யாரை வந்து மிரட்டுவது என்ற எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணத்தில் உங்களுக்குப் பின்னூட்டமிட்டுத்தான் போலியின் கவனிப்பிற்குள்ளான என்னைப் போன்ற வலைப்பதிவர்கள் பலரும் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஆளுக்கொரு பக்கமாக உங்களைத் திரட்டிகளைவிட்டே விலக்க வேண்டும் என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்ட நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட ஒரு விதியின் செயலுக்கு நீங்களும் உடன் ஒரு காரணியாக இருந்த காரணத்தால் அதற்கான தீர்வை நோக்கி நீங்களும்தான் சென்றாக வேண்டும். இது உங்களுடைய கடமை.
இந்தக் கடமை எனக்கில்லை.. நான் பல யுத்தக் களங்களைக் கண்டவன் என்று புலம்புவீர்களானால்.. நில்லுங்கள்.. ஆனால் ஒன்று..
உங்களது எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்களே வெறும் காற்றுடன் மோதி, மனநோயாளியான போலிக்கு இன்னொரு துணை நோயாளி போலியாக காட்சி தரும் அவலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வேறு எதுவும் சொல்வதற்கில்லை..
வாழ்க வளமுடன்..