10-10-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நல்ல விஷயங்களை யாரிடமிருந்தாலும் கற்றுக் கொள்வதில் நாம் தவறக் கூடாது. நம் கலாச்சாரம்தான் உயர்ந்தது; மற்றைய கலாச்சாரங்களில் கற்றுக் கொள்ள ஏதுமில்லை. என்று சொல்லி எதையும் ஏறெடுத்துப் பார்க்காமல் புறக்கணித்தால் நமக்குத்தான் நஷ்டம்.
நியூஜெர்ஸியில் இருக்கும் எனதருமைத் தம்பி செந்தில்குமார் ஒரு புகைப்படத்தை ஈ-மெயிலில் அனுப்பி “அண்ணா.. போட்டோவைப் பார்.. செய்தியைப் படி.. உனக்கேற்றதுதான்..” என்று சொல்லியிருந்தான்.
அந்தப் புகைப்படம் இது.

படத்தில், படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ். அவருக்குப் பின்புறமாக அமர்ந்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஆஸ்டின் ஹட்ச்சர். அவர் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் மூடில் அவரைக் கொஞ்சிக் கொண்டிருப்பது புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவியும், ஹட்ச்சரின் தற்போதைய மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான டெமிமூர்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..?
நம் ஊரில் டைவர்ஸ் வாங்கியவர்களில் 90 சதவிகிதத்தினர் “என் மூஞ்சில நீ முழிக்கக் கூடாது.. உன் மூஞ்சில நான் முழிக்க மாட்டேன்” என்று ‘மங்கம்மா சபதம்’ போட்டுத்தான் பிரிகிறார்கள். அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு டைவர்ஸ் ஆனவர்களின் நிலைமைதான் இதில் மிக, மிக சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.
“குழந்தைகளை நான்தான் வைத்துக் கொள்வேன்” என்று சொல்லி அப்பா, அம்மா இருவரும் கோர்ட் படியேறி சண்டையிடுவது டைவர்ஸிற்கு அடுத்தக் கட்ட மோதலாக இருக்கிறது. “குழந்தைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அப்பாவுடன் இருக்கலாம்..” என்பதுதான் பெரும்பாலான இது போன்ற வழக்குகளின் தீர்ப்பாக உள்ளது.
இதற்குப் பின் அவரவர் தத்தமது போக்கில் வேறு, வேறு திருமணங்களைச் செய்து கொண்டு போனாலும், குழந்தைகளின் நிலைமைதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும் அப்பாவைச் சந்திக்க வருவதும், மீதி நாட்களில் அம்மாவுடன் வாழ்வதுமாக ஒரு நாடோடி வாழ்க்கையை சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஏதாவது ஒரு பள்ளி நிகழ்ச்சி, உறவுக்காரர்கள் நிகழ்ச்சி என்றால்கூட பிள்ளையைப் பெற்றவர்கள் ஒன்றாக கலந்து கொள்ள முடியாத சூழல். “அவ வந்தா நான் வர மாட்டேன்..”; “உன் அப்பன் வந்தா நான் வர மாட்டேன்” என்று ஆளுக்கொரு பக்கமாக குழந்தைகளை இழுத்துக் கொண்டு இம்சிப்பது தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது.
ஏன்.. எங்காவது நேருக்கு நேர் சந்திக்கின்ற சூழல் வந்தாலும்கூட கவனமாகத் தவிர்த்துவிட்டுத்தான் போகிறார்கள். சொல்கின்ற காரணம் “அப்படியொரு நபரை நான் சந்திக்கவே இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்” என்கிற அளவுக்கு அவர் மீதான காழ்ப்புணர்வை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இது போகப் போக அவர்களுடைய குழந்தைகள் மீதும் செலுத்தப்பட்டு யாரும், யாரையும் நம்பாத சூழல்தான் சமூகத்தில் உருவாகி வருகிறது.
இங்கே கதையோ அப்படியே நேர்மாறாக நடந்திருக்கிறது.
11 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு டைவர்ஸ் வாங்கியவர்கள் வில்லிஸ¤ம், டெமிமூரும். இப்படியொரு சூழ்நிலையில் குழந்தைகளுக்காக தனது முன்னாள் மனைவியின் ரொமான்ஸை பார்க்கத் தகுந்த சூழலில் அவர்களுடன் வருவதற்குரிய மனப்பக்குவம் வில்லிஸ் என்ற தந்தைக்கு வந்திருப்பது நிச்சயம் ஆச்சரியத்துக்குரியதுதான்.
புரூஸ் வில்லிஸோ “இதில் என்ன ஆச்சரியம்?” என்கிறார்.
“எனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் ஸ்டெப் பாதர் ஹட்ச்சர்தான். குழந்தைகள் பிக்னிக் போக வேண்டும் என்றார்கள். தனித்தனியே போவதென்றால் குழந்தைகளுக்கு வசதிப்படாது. எல்லாரும் ஒண்ணாவே போவோம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம். டெமி என்னைவிட்டுப் பிரிந்தாலும், என்றென்றும் எனது காதலுக்குரியவர்.. குழந்தைகளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்.. தப்பில்லை” என்கிறார் வில்லிஸ்.
நிச்சயம்.. பாராட்டக்கூடிய அதே சமயம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்..