Archive for the ‘சர்கோஸி’ Category

நினைத்தேன் எழுதுகிறேன்!

ஜூன் 13, 2008

13-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

பெண் சுதந்திரம், பெண் உரிமை என்று இந்தியாவில் நாம் பல ஊடக வழிகளில் முழங்கிக் கொண்டிருந்தாலும் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை, குழந்தை பெறுதல் என்ற நிலைகளில் ஆண்களின் முடிவே இறுதி முடிவாக இருக்கின்றது. இதில் அவ்வப்போது மீறல்கள் நிகழும்போதுதான் அப்படியொரு கோணமும் இருக்கிறதா என்று நினைக்கத் தோன்றும்.

அது மாதிரியானவொரு உணர்வை பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி ஷெர்ரி பிளேர் எழுதிய ஒரு புத்தகத்தின் சில பகுதிகளை தமிழ் மொழி பெயர்ப்பில் படிக்கும்போது தெரிந்தது..

ஷெர்ரி சொல்கிறார்..

“3 குழந்தைகளுக்குப் பிறகு கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். இதனால் 4-வது குழந்தை உண்டாகிவிட்டது. அப்போது அதனைக் கலைக்க எனக்கு மனமில்லை.. பெற்றுக் கொண்டேன்.

பின்பு ஈராக்குடன் போர் துவங்கிய சமயத்தில் ஒரு மாநாட்டுக்காக பிளேருடன் ‘பால்டிமோர்’ நகருக்குச் சென்றிருந்தபோது கைவசம் ‘காண்டம்’களை கொண்டு செல்லவில்லை. அதனால் அப்போதும் கரு உண்டாகிவிட்டது. ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளன என்பதால் இந்த முறை நான் யோசித்தேன்.

என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தபோது அந்தக் கரு தானாகவே கலைந்துவிட்டது. இதுவும்கூட நல்லதுதான் என்று நினைத்தேன். இதை பிளேரிடம் சொன்னேன்.

பிளேரோ இதனை உடனடியாக மீடியாக்களிடம் சொல்லும்படி என்னிடம் சொன்னார். “ஏன்..?” என்றேன்.. “ஈராக் மீது போர் தொடுத்துள்ள காரணமாக மக்களின் பார்வை நம் மீது தீவிரமாகப் பதிந்துள்ளது. நீ இதனை வெளியில் சொன்னால் அவர்களின் பார்வை திசைதிரும்பும். அதற்காகத்தான்..” என்றார்.

அவருடைய அரசியல் விளையாட்டிற்கு என்னையும், குடும்பத்தையும் பயன்படுத்த நினைத்தது குறித்து நான் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன். இதனால் நான் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று பிளேரிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்..”

– இப்படி எழுதியிருக்கிறாராம் ஷெர்ரி பிளேர்..

படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சம உரிமை என்பதை வெறும் பேப்பர் வடிவத்தில் மட்டுமல்ல.. பேச்சிலும் எழுத்திலும் வேண்டும் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் ஷெர்ரி போன்றவர்கள் முழு மனதுடன் முன் வந்து கணவர் எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் தனக்கென்று ஒரு உரிமை உண்டு என்பதனை வெளிக்காட்டியிருக்கிறார். இதனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இவர் என்றில்லை.. சமீபத்தில் இன்னொருவரும் இப்படி பொரிந்திருக்கிறார்.

பெயர் Marie-Dominique_Culioli. பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் சர்கோஸியின் முதல் மனைவி. இவருக்கும் சர்கோஸிக்கும் இடையிலான உறவால் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேரி சொல்கிறார்.

“சர்கோஸியின் இரண்டாவது மனைவியான செசிலியா எனது நெருங்கிய தோழி. நான் அவரை முழுமையாக நம்பினேன்.. அவர் எனக்கு குடும்ப நண்பியாக இருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சர்கோஸிக்கு செசிலியா மீது காதல் இருந்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஒரு நாள் அவளுடைய கணவருடன், சர்கோஸி, நான் என்று நால்வரும் சுற்றுலாவுக்கு போயிருந்தோம். அப்போது நான் வெளியே போய்விட்டு அறைக்குத் திரும்பும்போது கதவருகே சர்கோஸியின் செருப்பு இருந்ததைப் பார்த்தேன். அதோடு அறையினுள் இருந்து சப்தமும் கேட்டது. புரிந்து கொண்டேன்.

சர்கோஸிக்கு அவள் மீதான காதல் தாறுமாறாக இருந்ததினால் நான் அவரை விட்டுப் பிரிய வேண்டியதாகிவிட்டது. இப்போது சர்கோஸியைகூட நான் மன்னித்துவிடுவேன். ஆனால் செசிலியாவை மன்னிக்கவே மாட்டேன். அவள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள்..” என்கிறார்.

மிக சமீபத்தில்தான் இப்படி பேட்டியளித்திருக்கிறார் மேரி.

எது எப்படியிருந்தாலும் ஒரு நாட்டின் உச்ச பதவியில் இருப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை சம்பந்தப்பட்ட பெண்களே வெளிப்படையாக பேச முன்வருவதை நினைத்து கை தட்டத்தான் தோன்றுகிறது.

இதே பிரான்ஸ் நாட்டின் அதிபராக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மித்தரண்ட், கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

அவர் இறந்த பின்பு அவருடைய மனைவி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது, “நாங்க முன்னாடி குடியிருந்த தெருவுல ஒருத்தியை விட்டு வைச்சதுல்ல உங்க பிரஸிடெண்ட்.. அவருடைய வாழ்க்கையில எத்தனை பொம்பளைங்க வந்தாங்க, போனாங்கன்னு எண்ணவே முடியாது.. என் பிரெண்ட்டுன்னு ஒருத்தியை அறிமுகப்படுத்தி வைச்சா போதும்.. அவ்வளவுதான்.. எப்படித்தான் கவிழ்ப்பாரோ தெரியாது.. அடுத்த ஒரு மாசத்துக்கு அவகூடதான் சுத்துவார்..” என்று தைரியமாக சொல்லியிருந்தார்.

அப்போதே எனக்கு மிக, மிக ஆச்சரியத்தை அளித்திருந்தது இந்த பேட்டி.

நம் இந்தியாவில் பிரபலமானவர்களின் அத்துமீறல்கள், கொடுமைகளைப் பற்றி அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கும் உண்மைகள் மிக, மிக குறைவுதான்.. குடும்பமே முக்கியம் என்ற ஒரு கொள்கையாட்சி சூழலில் வாழ்ந்து வரும் இந்தியாவில் இந்தக் குறைவு என்பது ஆச்சரியமில்லைதான்.

அம்பேத்கார் உடல் நலம் குறைவில்லாமல் இருந்தபோது அவருக்கு பணிவிடை செய்ய வந்த நர்ஸ் ஒருவர், திடீரென்று குழந்தை பெற்று தனது குழந்தைக்கு அம்பேத்கார்தான் தந்தை என்று சொல்லி அந்தக் காலத்திலேயே பரபரப்பை ஊட்டினாராம். அம்பேத்கார் இதை உடனேயே மறுத்திருக்கிறார்.. – இப்படி ஒரு செய்தியையும் ஒரு பத்திரிகையில் சில காலத்திற்கு முன்பு படித்திருக்கிறேன்..

அடுத்தாற்போல் தமிழக முன்னால் முதல்வர் திருமதி ஜானகி ராமச்சந்திரன் தனது அன்பு கணவர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களைப் பற்றி, “அந்த பொம்பளை பேச்சைக் கேட்டு இவரு பாம்பா சீறுராரு” என்று விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜானிடம் வருத்தப்பட்டது பதிவாகியிருக்கிறது.

இலட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைப் பற்றி அவருடைய முன்னாள் மனைவி விஜயகுமாரி அளித்திருந்த பேட்டியும் சர்கோஸி மேட்டர்போல்தான் இருந்தது.

இது ஒன்று மட்டுமே பெண் உரிமை இல்லை என்பது தெரியுமென்றாலும், இந்த விஷயத்தில் நம் பெண்கள் சீற வேண்டியவைகள் நிறைய உண்டு என்பதைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
———————————————————–
டந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல், பிரேசில், பிரான்ஸ் பட விழாக்கள் நடந்தேறிவிட்டன. டைப் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் எனது வீட்டு கம்ப்யூட்டர் படுத்துவிட்டது. CPU-வை மட்டும் தூக்கிச் சென்ற பொறியாளர் கடந்த 60 நாட்களாகத் தண்ணி காட்டிவிட்டார்.

முன்பெல்லாம் ரேஷன் கடையில்தான் கூட, குறைய என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கும். இப்போது கம்ப்யூட்டர் வன்பொருள் வல்லுநர்கள் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டு பரவலாகப் பதிந்துள்ளது.

நான் முன்பு ஒரு முறை விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தும்போது சிஸ்டத்திற்கு பாஸ்வேர்டு கொடுத்திருந்தேன். பின்பு அதனை மறந்துவிட்டேன்.. அதனால் உள்ளே நுழைய முடியாமல் தவித்தேன்.

வெறும் வாயாலேயே சினிமா கதைகளை ஓட்டிக் கொண்டிருந்த கொடுமையான காலம் அது. சிங்கிள் டீயைக் குடித்து காலம் தள்ளிக் கொண்டிருந்த என்னிடம், “300 ரூபாய் கொடுத்தால் அதை சரி செய்து தருகிறேன்..” என்று வன்பொருள் வல்லுநர் ஒருவர் சொன்னார். நானும் அப்போது என்னிடமிருந்த சில புத்தகங்களை எடைக்கு எடை போட்டுவிட்டு கிடைத்த பணத்தைக் கொடுத்தேன்.

“ரொம்ப கஷ்டமான வேலை ஸார்.. தூக்கிட்டுப் போய்தான் பாக்கணும்..” என்று சொல்லி சி.பி.யூ.வைத் தூக்கிச் சென்றார் அவர். 5 மணி நேரம் கழித்து மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு “சிஸ்டம் ரெடியா இருக்கு ஸார்.. வந்து எடுத்துக்குங்க..” என்றார். ‘300 ரூபாய் தண்டமாச்சே..’ என்று முருகனைத் திட்டியபடியே சிஸ்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்தேன்.

இது நடந்து நான்கு நாட்கள் கழித்து வேறொரு கம்ப்யூட்டர் பொறியியல் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் நடந்ததை சொன்னபோது விழுந்து, விழுந்து சிரித்தார். “ஏன் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க..? சி.பி.யூ. டப்பாவை கழட்டிட்டு அதுல இருக்கிற பேட்டரியை கழட்டி மறுபடியும் திருப்பி போட்டு, சிஸ்டத்தை ஆன் செஞ்சா பாஸ்வேர்ட் கேட்காதே..” என்றார். எனக்கு பகீரென்றது…

அப்போதிலிருந்தே சிஸ்டத்தில் ஏதேனும் கோளாறு என்றால் நான்கைந்து பொறியாளர்களிடம் அட்வைஸ் கேட்டுவிட்டுத்தான் எதையும் செய்வது வழக்கம். அப்படியும் இந்த முறையும் சுத்தமாக ஏமாந்துவிட்டேன்.

ஹார்டு டிஸ்க் பூட் ஆகாமல் போய்விட அதை மாற்ற 2000 ரூபாய்க்கு 80 ஜி.பி. புது ஹார்டு டிஸ்க் வாங்கிக் கொடுத்தேன். “உடனேயே மாற்றித் தருகிறேன்” என்று சொல்லி எடுத்துப் போனவர், “உங்க மதர்போர்டு இந்த புது ஹார்டு டிஸ்க்கோடு செட் ஆகலே ஸார்..” என்று சொல்லிவிட்டு என்னைக் கேட்காமலேயே பென்டியம்-3 மதர் போர்டை போட்டு அஸெம்பிள் செய்துவிட்டார்.

கூடவே நான் போட்டு வைத்திருந்த டிவிடி ரைட்டரை எடுத்துவிட்டு சிடி ரைட்டரை மாத்திப் போட்டு, 2 மாதம் கழித்து வீட்டில் வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். கூடவே பில்லும்தான்.. 5000 ரூபாய் தர வேண்டுமாம்..

தாங்காதுடா சாமி.. “எனக்கு பழைய டேமேஜா இருந்த சிஸ்டமாவே மாத்திக் கொடுத்திருப்பா”ன்னு கத்திக்கிட்டிருக்கேன்.. கட்டப் பஞ்சாயத்து நடந்திட்டிருக்கு.. முடிஞ்சவுடனேதான் விமர்சனமெல்லாம் எழுதணும்..

———————————————————-

ன்று காலை ஸ்பெஷல் ஷோவில் ‘தசாவதாரம்’ படம் பார்த்தேன்.. ‘சிவாஜி’ படத்தையும் இதேபோல் முதல் நாளே பார்த்திருந்தும் விமர்சனம் எழுதாமல்விட்டேன். அதேபோல் இப்போதும் இருப்பதுதான் நல்லது என்று என் மனது சொல்வதால், கமலின் ‘தசாவதாரத்தைப்’ பற்றி சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஒன்றுமில்லை.

மீண்டும் சந்திப்போம்.