02-09-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நமது அரசியல்வாதிகள் நீதி, நேர்மை, நியாயம், இவைகளைப் பற்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் எந்த அளவுக்கு வேடிக்கையாக இருக்குமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ என்கிற வாரப் பத்திரிகையில் தம்பி யுவகிருஷ்ணா என்னும் லக்கிலுக், ‘சைபர் கிரைம்’ பற்றி தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும், அதை பயன்படுத்திக் கொள்ளும் அவருடைய முனைப்பான உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்..
சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தொடர் கட்டுரையில் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் இ-மெயில் ஹாக்கிங் செய்யப்பட்டது பற்றி எழுதியிருந்தார் தம்பி. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் ஊடாக மேலும் சில விஷயங்களை நான் இந்தப் பதிவில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.
அன்றைய பகல் 12 மணியளவில்தான் சாருவின் ஈ-மெயில் ஹேக்கிங் பற்றியச் செய்திகள் தமிழ்மணத்தில் பதிவாக வெளி வந்தன. அதைப் படித்துவிட்டு உடனடியாக நான் சாருவுக்கு போன் செய்து பேசினேன். “சரவணன்.. நீங்க நூத்தியொண்ணாவது ஆள்.. நான் மெட்ராஸ்லதான் இருக்கேன். மலேசியாவுக்குப் போகலை.. எவனோ ஒருத்தன் செஞ்சிருக்கான். யாருன்னு தெரியலை. இது பொய். யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லி நீங்க ஒரு பதிவா உங்க பிளாக்ல போட்டிருங்களேன்..” என்றார் சாரு.
தொடர்ந்து நானும் சாருவிடம் பேசியதையும், அவர் சொன்ன விஷயத்தையும் அந்த எச்சரிக்கை பதிவில் பின்னூட்டமாக இட்டேன். அடுத்து யார் அந்த வேலையைச் செய்திருப்பார் என்று தேடுவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் இப்படி சாருவுக்கு எதிரான ஒரு வினையை நான் அப்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், சாருவின் ‘மம்மி ரிட்டர்ன்ஸ்’ கடிதம். அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் ‘போலி டோண்டு’வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தமிழ் வலையுலகத்தை தனது தீந்தமிழால் மிரட்டிக் கொண்டிருந்த ‘முத்தமிழ்மன்ற மூர்த்தி’ என்ற அந்த ‘போலி டோண்டு’ தன்னை எதிர்ப்பவர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிர்ப்பான் என்பது நமக்கும் தெரியும்தானே.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடந்தேறும் என்றுதான் நான் நினைக்கவில்லை.
தன்னை எதிர்ப்பவர்களின் வலைத்தளங்களை பறிப்பது.. மெயில் முகவரிகளை ஹேக்கிங் செய்வது, அந்தப் பதிவர்கள் பெயரில் போலித்தளங்களை உருவாக்குவது.. அத்தளங்களில் பதிவர்களின் புகைப்படங்களை வைத்து காமக்கதைகளை எழுதி நிரப்புவது.. என்கின்ற அத்தனை நல்ல வேலைகளையும் செவ்வனே செய்து வந்த உத்தமத் தமிழனான மூர்த்திதான் இதையும் செய்திருப்பான் என்பதை அன்றைக்கே, தொலைபேசியில் சாருவிடம் சொன்னேன்.
இது மாதிரி மொத்தமாக ஆட்டையைப் போடும் அளவுக்கான புத்திசாலி அவன் ஒருவனே என்ற எனது அதீத நம்பிக்கை, இரண்டு நாட்களில் நிஜமாகவே உண்மையாக மாறியிருந்தது.
சிங்கையில் இருக்கும் நமது சக பதிவர் குழலியும் என்னைப் போலவே மூர்த்திதான் இதை செய்திருப்பானோ என்று சிந்தித்திருக்கிறார். என்னைவிடவும் மூர்த்தி பற்றி நன்கு அறிந்தவர் அவர்தான். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
சாருவின் ஹேக் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியான charunivedita@hotmail.com-க்கு Read notify Software-ஐ பயன்படுத்தி தனது இ-மெயில் முகவரியில் இருந்து “What happened..?” என்று கேட்டு ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார் குழலி.
அது எங்கே ஓப்பன் செய்யப்பட்டது என்கிற தகவல் குழலிக்கு உடனேயே திரும்பக் கிடைத்திருக்கிறது. மலேசியாதான் என்றவுடன் உடனேயே குழலி எனக்குத் தகவல் கொடுத்தார். எனது சந்தேகம் நூறு சதவிகிதம் உறுதியானது மூர்த்திதான் என்று..!
அடுத்து உடனேயே மூர்த்தியின் சொந்த மெயிலுக்கு மெயில் அனுப்பினால் சந்தேகத்தில் திறக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு என்பதால், மறுநாள் மூர்த்தி பயன்படுத்தும் ஒரு மெயில் முகவரியான unmaisolli@gmail.com-ற்கு “டேய் மாப்புள்ள” என்று பாசத்தைக் கொட்டி ஒரு மெயிலை அனுப்பியிருக்கிறார் குழலி.
அந்த மெயிலும் ஓப்பன் செய்யப்பட்டதற்கான அத்தாட்சியை Read Notify அனுப்பியது. இதுவும் எதிர்பார்த்ததைப் போலவே மலேசியாவில்தான் திறக்கப்பட்டிருந்தது.
ஒரு வேளை ‘உண்மைசொல்லி’ தான் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்த குழலி, மீண்டும் அவனுடைய நீண்ட நாளைய மெயில் முகவரியான mmoorthee@gmail.comற்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுள்ளார். இந்த மெயிலும் அதே ஐ.பி.எண்ணில், மலேசியா கோலாலாம்பூரில்தான் திறக்கப்பட்டுள்ளது.
இங்கே இன்னுமொரு விஷயம்.. குழலி அனுப்பியிருந்த ‘உண்மைசொல்லி’ என்கிற மெயிலுக்குச் சொந்தக்காரனான ‘உண்மைசொல்லி’ என்னும் ஒருவர் அப்போதைய காலக்கட்டங்களில் சாருவைப் பற்றி கன்னாபின்னாவென்று ஆபாசமாகத் திட்டித் தீர்த்து பின்னூட்டங்களை பல இடங்களிலும் தெளித்துக் கொண்டிருந்தார். பதிவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த ஜிமெயிலும், மூர்த்தியின் நிஜமான ஜிமெயிலும் ஒரே ஐ.பி.எண்ணில் இருந்துதான் ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் அவன் மீதான எனது சந்தேகத்தை பல மடங்கு உயர்த்தியது.
குழலி உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைச் சொல்லி சாருவிடம் இதனைத் தெரிவித்து மூர்த்தி மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தரச்சொல்லும்படி கூறினார்.
நானும் உடனடியாக சாருவைத் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். சாருவோ, “நான் ஏற்கெனவே கம்ப்ளையிண்ட் பண்ணிட்டேன்.. விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்..?” என்றார். “ஏற்கெனவே புகார் கொடுத்துவிட்டதால் திரும்பவும் போக விருப்பமில்லை.(உண்மையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்) இதுவும் இருக்கட்டும். தேவைப்பட்டால் பின்பு பயன்படுத்துவோம்..” என்றார் சாரு.
என்னுடைய இந்த அவசரத்திற்கும், ஆதங்கத்திற்கும் காரணம், இதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் நானும், செந்தழல் ரவியும் இணைந்து சென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மூர்த்தி பற்றி புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தோம். இந்த நேரத்தில் சாருவின் இந்தப் புகாரும் சேர்ந்தால், எங்களுக்கு ஒரு கூடுதல் வலு கிடைக்கும் என்று நான் நினைத்தேன்.
இதனால் சாருவிடம் “கேஸ் என்னாச்சு..?” என்று வற்புறுத்தத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் இது விஷயமாக அனத்தியபடியே இருந்தேன்.
இந்த நேரத்தில்தான் எனது வழக்குக்காக ‘போலி டோண்டு’வான மூர்த்தியின் ஆதி, அந்தங்களை அவனுடைய சொந்தத் தளமான முத்தமிழ்மன்றம்.காம்-ல் தோண்டித் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு க்ளூ கிடைத்தது.
‘போலி டோண்டு’ என்பது இந்த ‘முத்தமிழ்மன்ற மூர்த்தி’தான் என்று வருடக்கணக்காக நமது டோண்டு ஸார் சொல்லி வந்ததால், மூர்த்தி ஒரு கட்டத்தில் ‘முத்தமிழ்மன்ற’த்தில் தனது பெயரை ‘முருகா’ என்று மாற்றி வைத்துக் கொண்டான். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
அப்படி அந்த ‘முருகா’ என்கிற பெயரில் எழுதப்பட்ட பல செய்திகளை ஒன்று திரட்டிப் படித்துக் கொண்டிருந்தபோதுதான், இந்த செய்தி என் கண்ணில்பட்டது.
சாருவின் பெயரைச் சொல்லி பணம் பறிக்க முயன்ற கதைதான் இது. ‘மங்கை’ என்ற ஒரு பெண் தனக்கு அனுப்பிய மெயிலில் இது பற்றி சொல்லியிருப்பதாகவும், இதனால் இதனைப் படிக்கின்ற முத்தமிழ்மன்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்கும்படி இந்த ஒழுக்கசீலரான ‘முருகா’ என்கிற ‘மூர்த்தி’ அறிவுரையே நிகழ்த்தியிருக்கிறார். இதனை எழுதியிருப்பது 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி.
அந்த ஆங்கில கடிதத்தைப் படித்துப் பாருங்கள். இதுவும், சாருவுக்காக எழுதப்பட்ட ஆங்கில கடிதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பெயர் மற்றும் இடங்கள் மட்டுமே வேறு வேறாக மாற்றப்பட்டுள்ளன. இதனைப் படித்த பின்பு மூர்த்தி மீது இருந்த எனது சந்தேகம் மிக, மிக உறுதியானது, இவனைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்திருக்க முடியாது என்று.. உடனே இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சாருவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்.
கேஸ் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரியாத சூழல் இருந்ததால், சாருவிடம் அவ்வப்போது நான் இது தொடர்பாக விசாரித்தபடியே இருந்தேன். அப்படி ஒரு முறை நான் சாருவைத் தொடர்பு கொண்டபோது, “சரவணன்.. நான் மலையாள பத்திரிகைக்காக மும்முரமாக எழுதிக்கிட்டிருக்கேன். இப்ப பேசவே எனக்கு நேரமில்லை. நாளைக்கு பேசுவோம். விட்ருங்க..” என்றார் கண்டிப்பான குரலில்.
நான் அன்றைக்கு மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், அது தொடர்பாக மீண்டும் வற்புறுத்தினேன். சாரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டது அவரது வார்த்தைகளில் இருந்து தெரிய வர.. “ஓகே ஸார்..” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.
மூர்த்தி பற்றி சைபர் கிரைம் அலுவலகத்தில் நான் புகார் கொடுத்ததில் இருந்து நாள்தோறும் விசாரணைக்காக என்னை அழைத்தபடியே இருந்தார்கள். அப்படி என் வழக்கு தொடர்பாக சென்ற நேரத்தில் நண்பர் குழலி அனுப்பியிருந்த ஆதாரங்களையும், நான் முத்தமிழ்மன்றம்.காம்-ல் தேடியெடுத்த பழைய கடித நகலையும் விசாரணை செய்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து, “சாருவின் இ-மெயிலை ஹாக் செய்ததும் இந்த மூர்த்திதான்..” என்ற தகவலைத் தெரிவித்தேன்.
அங்கே வழக்குகளை எல்லாம் பிரித்து, பிரித்து விசாரிப்பதால் சாருவின் வழக்கை சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரே நேரடியாக விசாரிப்பதாகவும், “மேற்கொண்டு இது பற்றி நீங்கள் இன்ஸ்பெக்டரிடம்தான் சொல்ல வேண்டும்..” என்றும் சொன்னார்கள். நான் இன்ஸ்பெக்டரை சந்திக்க முயற்சித்தபோது அப்போது பார்த்து அவர் வெளியில் போய்விட்டார்.. மறுநாள் வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
மறுநாள் மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்வதற்குள் சாருவிற்கு ஒரு போன் செய்து சொல்லிவிடலாம் என்று நினைத்து அவருக்கு போன் செய்தால், மனுஷன் ஒரு அணுகுண்டையே தூக்கிப் போட்டார்.
“நான் கேஸை வாபஸ் வாங்கிட்டேன் சரவணன்..” என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எனது வழக்கு, தம்பி ரவியின் வழக்கை விடவும் சாருவைத்தான் நான் அதிகம் நம்பியிருந்தேன். சாரு பெரிய எழுத்தாளர் என்பதாலும், கனிமொழியின் தீவிர சிபாரிசினால் வழக்கு பதியப்பட்டு இருந்ததினாலும் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியிருந்தார்கள். எனவே ‘எந்த வகையிலும் மூர்த்தி தப்பிக்க முடியாது. நிச்சயம் அவனை பிடித்துவிடுவார்கள்’ என்று கலர், கலராக நான் கொண்டிருந்த கனவை, ஒரு லாரி தண்ணீரை ஊற்றிக் கலைத்தார் சாரு.
“அவங்க இஷ்டத்துக்கு கூப்பிடுறாங்க.. ‘அந்த நேரம் வாங்க’. ‘இந்த நேரம் வாங்க’ன்றாங்க.. எனக்கு வேலையிருக்கு சரவணன்.. நான் புகார் கொடுத்தாச்சு.. அதுலயே டீடெயிலா எழுதிட்டேன்.. அப்புறம் எதுக்கு ‘வா.. வா’ன்றாங்க.. நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா..? அதான் ‘வர முடியாது’ன்னு சொன்னேன். ‘அப்ப நேர்ல வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டுப் போங்க’ன்னு சொன்னாங்க.. நானும் போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..” என்றார்.
நான் அதற்குப் பிறகு அவரிடம் எவ்வளவோ கெஞ்சியும், சாரு பிடிவாதமாக மறுத்துவிட்டார். “எனக்கு வேணாம் சரவணன்.. அது எவனா வேண்ணாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. ப்ளீஸ்.. விட்ருங்க…” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
இதன் பின் நான் சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். “உங்க எழுத்தாளர்தான் அவசரப்பட்டு கேஸை வாபஸ் வாங்கிட்டாரே..!? இப்ப என்ன ஸார் பண்றது..? இது விஷயமா மேல எதுவும் பேசவும் முடியாது. செய்யவும் முடியாது. வேணும்னா உங்க கேஸ் விஷயமா பேசுங்க.. நிச்சயமா செய்யலாம்..” என்று நழுவலான பதிலைச் சொன்னார் அந்த இன்ஸ்பெக்டர்.
இதையும் சாருவிடம் சொன்னேன். தான் ஒரு எழுத்தாளர் என்ற அக்கறையே இல்லாமல், தன்னை நினைத்த நேரத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக அப்போதும் சொன்னார் சாரு. “போலீஸ் விசாரணையில் இது சகஜம்தான ஸார்..?” என்றேன். “இல்லை.. இல்லை.. அப்படியொண்ணும் அவனைப் புடிச்சு ‘உள்ள’ வைக்குறதால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அப்புறம் நான் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்..?” என்று அதையே திருப்பிச் சொன்னார்.
எனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை. ஆனாலும் ஜீரணிக்கத்தானே வேண்டும். இதனையும் முழுங்கித் தொலைவோம் என்று நினைத்து மறந்தேன்.
பின்னாளில் வலையுலகம் வலைவீசித் தேடிக் கொண்டிருந்த அந்த ‘போலி டோண்டு’ என்னும் மூர்த்தியை அதே சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்த ஒரு கேள்வியையும் கேட்டுத் தொலைத்தேன். “சாரு இமெயிலை ஏன்யா ஹேக் செஞ்ச..? அவர் உனக்கு என்ன பாவம் செஞ்சாரு..?” என்றேன். கேட்டவுடன் அந்த ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர் செய்துகொண்டிருந்த அதே ஆக்ஷனை.. சினிமா ஹீரோயின்களைப் போல தலையைக் குனிந்து கொண்டு, காலால் கோலம் போட்டுக் கொண்டு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்தார். வாயைத் தொறக்கணுமே.. ம்ஹும்.. எல்லாம் எங்க நேரம்..?
சாருவுக்கும் போலி டோண்டு மேட்டர் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்.. எனதருமை வாத்தியார் சுஜாதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, நான் சாருவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது டோண்டுவும் எங்களிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.
அவர் அந்தப் பக்கம் போனவுடன் சாரு என்னிடம் டோண்டுவைக் காட்டி, “இவர்தான் போலி டோண்டுவா..?” என்றார். அந்த இடம் மரண வீடாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் சிரித்திருப்பேன். அவ்வளவு அதிர்ச்சியாகிப் போனேன். சாரு கேட்டது சாதாரணமாகத்தான் என்றாலும், அவருக்கு வலையுலக அரசியல் அவ்வளவுதான் தெரியும். மேற்கொண்டு நான்தான் அன்றைக்கு கிடைத்த நேரத்தில், எனக்குத் தெரிந்த அளவுக்கான டோண்டு-போலி டோண்டு விஷயங்களை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.
சாரு மீது இந்த விஷயத்தில் எனக்கு பலத்த அதிருப்தியும், வருத்தமும் இன்றளவும் உண்டு. அவர் மட்டும் சிரமம் பார்க்காமல், காவல்துறையுடன் கொஞ்சம் இணங்கிப் போயிருந்தால், இந்நேரம் மூர்த்தி கைது செய்யப்பட்டு வலையுலகத்திற்கு ஒரு பெரும் உதவி செய்த பெயரும் அவருக்குக் கிடைத்திருக்கும்.
இப்போது பாருங்கள்.. சாருவின் புகாருக்குக் கிடைத்த ஆதாரங்களைவிடவும், பல மடங்கு ஆதாரங்களை சுமார் 200 பக்கங்கள் அளவிற்கு எனது புகாருக்காகவும், ரவியின் புகாருக்காகவும் திரட்டிக் கொடுத்துள்ளபோதிலும், இன்னமும் நமது சைபர் கிரைம் போலீஸ் மூர்த்தியை கைது செய்யவில்லை. வரவழைத்து, வரவழைத்து, பேசி பேசியே திருப்பி அனுப்பினார்கள். பாஸ்போர்ட்டை மட்டும் முடக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். (ஆனால் நான் இதனை நம்பவில்லை)
“இன்னும் என்னதான் ஆதாரங்கள் வேண்டும்..?” என்றுகூட கேட்டுப் பார்த்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. நாங்கள் அவ்வளவு முக்கியஸ்தர்களா இல்லையோ என்னவோ..! அல்லது எங்களுக்குப் பின்புலமாக அரசியல், பண பலம் இல்லையோ.. தெரியவில்லை..
எத்தனையோ நல்ல, நல்ல வலையுலக எழுத்தாளர்களை வீட்டுக்கு துரத்தியடித்து, பல பதிவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வருடக்கணக்காக மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சேடிஸ்ட்டான இந்த மகராசனை இப்படியே விட்டுவைத்தால் எப்படி?
சரி.. போய்த் தொலையட்டும்..!!!
மீண்டும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வருவோம்.
இந்த ‘போலி டோண்டு’ என்னும் மூர்த்திதான் சாருவின் இ-மெயிலை ஹேக் செய்தவன் என்கிற தகவலை, அன்றைய நிலைமையில் என்னுடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருந்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் நான் தெரிவித்திருந்தேன்.
செந்தழல் ரவி, வரவனையான், ஓசை செல்லா, மற்றும் மூர்த்தி மீது அசைக்க முடியாத ஒரு ஆதாரத்தைக் கொடுத்த பெங்களூர் அருண் என்று பலரிடமும் நான் சொல்லியிருந்தேன். இவர்கள் மூலமாக பலருக்கும் இந்தத் தகவல் சென்றடைந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
தம்பி யுவகிருஷ்ணாவுக்கும் இந்தத் தகவல் நிச்சயம் கிடைத்திருக்கும். தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க யாரோ ஒரு ‘சைபர் கிரிமினல்’ என்றே பொத்தாம் பொதுவாக பெயரிட்டு அழைத்து, அது தனது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக காட்ட முனைந்திருப்பது கேலிக்குரிய செயல்.
ஒருவன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் சொல்லப்படாதவரையிலும் அவன் நிரபராதிதான் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. அதே சமயம் நம் மனசாட்சிக்கு ஏற்றவகையில், ஆதாரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் அவன் மீதான நமது சந்தேகத்தை முன் வைக்கலாமே..!?
ஒரு வேளை ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகை இதனை ஏற்றுக் கொள்ளாது என்று தம்பி சப்பைக் கட்டுக் கட்டலாம். ஆனால் இதற்கு முந்தைய பகுதிகளில் எல்லாம் வெளிநாடுகளில் ஏமாற்றிய, ஆட்டைய போட்ட கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், சோமாறிகள், முடிச்சவிக்கிகள் என்று பல பெயர்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறாரே.. அதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..?
உண்மையாகவே இவருக்கு சாருவின் இ-மெயில் ஹேக்கிங் விஷயத்தில் நடந்தவைகள் முழுமையாகத் தெரியாது எனில், எதற்காக இதனை எழுத வேண்டும்..?
நம் அருகில், நமது அண்டை வீட்டில் நடந்த ஒரு விஷயத்திலேயே இத்தனை விளக்கங்கள் வெளியில் தெரியாமல் காத்திருக்கும்போது அது எதனையும் விசாரிக்காமல் பொத்தாம் பொதுவாக, “நீங்கள் ஜாக்கிரதையா இருங்கள்.. திருடன் வர்றான்.. திருடன் வர்றான்..” என்று பூச்சாண்டி காட்டி பக்கத்தை நிரப்புவது தேவைதானா..?
அவருடைய அன்னியோன்ய நண்பர்களான வரவனையானுக்கும், செந்தழல் ரவிக்கும் இந்த அக்கப்போர்கள் நன்கு தெரியுமே. எழுதுவதற்கு முன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே..?
சரி இவர்கள் வேண்டாம்.. சாருதான் இவருக்கு பெஸ்ட் பிரண்ட்டாச்சே..? ஏன்.. இந்த விஷயத்தை எழுதப் போகிறேன் என்று சாருவிடமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவரும் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாரே..!?
சாருவின் இ-மெயில் திருட்டு பற்றிச் சொன்னவர், அது பற்றிய மேல்விவரங்கள், வழக்கு பதிவு, சந்தேகங்கள், வழக்கு வாபஸான கதையையும் சேர்த்து சொல்லியிருந்தால், அது முழுமையான ரிப்போர்ட்டாக இருந்திருக்குமே.
ஆக.. சாருவிடமும் கேட்காமல் அவரை மையமாக வைத்தே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எனில், தம்பியின் இந்த ‘சாதனை’யை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.
இதுவுமில்லாமல் ‘கிழக்குப் பதிப்பக’த்தின் தூண்களான நண்பர் பத்ரிக்கும், திருவாளர் பா.ராகவன் அண்ணாச்சிக்கும் மூர்த்தி செய்த இந்த தில்லாலங்கடி வேலையைப் பற்றி நன்கு தெரியும். அவர்களிடம் சொன்னது, சாட்சாத் நானேதான். சந்தேகம் இருந்தால் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இதனை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாளை இந்தக் கட்டுரை புத்தக வடிவில் ‘கிழக்குப் பதிப்பகம்’ மூலமாக வெளிவர வாய்ப்பு உண்டு என்பதால்தான்..
சரி.. எழுதுவது நான்.. யாரிடமும் இது பற்றி பேசுவதில்லை என்றால், விசாரிக்ககூடவா முடியாது..? ஒரு விஷயத்தை முழுமையாக நடந்தது என்ன என்று விசாரிக்காமல் ஒப்புக்குச் சப்பாணியாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது தப்பிக்க நினைக்கும் மனப்பான்மைக்கு ஒப்பானது.
இந்த ‘தப்பிக்க நினைக்கும்’ என்கிற வார்த்தையின் அர்த்தம், எழுதுகின்ற அந்தத் தம்பிக்கே தெரியும், என்பதால் அவரது மனசாட்சிக்கே அதனை விட்டுவிடுகிறேன். தம்பியின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, முழுக்கத் தெரிந்திருந்தும் தன்னுடைய முன்னாள் நண்பரான மூர்த்தியைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல், அவர் நழுவியிருக்கிறார் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.
இதனால்தான் முதல் பாராவில் இந்தப் பதிவின் முகவுரையை நான் அப்படித் துவக்கியிருக்கிறேன்.
மலேசியாவில் இருந்து என்றால், அவன் ஒருவன்தான் அங்கே இருக்கிறானா? வேறு யாரும் இல்லையா? வேறு ஒருத்தரும் இருக்கலாமில்லையா..? என்ற கேள்விகள் பலருக்கும் எழக்கூடும்.
அப்பாவி பதிவர்களின் பெயர்களில் இருந்த காமத்தளங்களைத் துவக்கியது போலி டோண்டு என்னும் இந்த முத்தமிழ்மன்ற மூர்த்திதான் என்று டோண்டுவும், தெரிந்தவர்கள் பலரும் கரடியாய் கத்தியபோது, பதிவர்கள் சிலர் இது போலத்தான் “எதற்கெடுத்தாலும் மூர்த்தியா..? அவன்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..? வேற யாராவது இருக்கலாமில்லையா..?” என்றெல்லாம் குதர்க்கமாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
ஆனால் சைபர் கிரைம் விசாரணையின்போது மூர்த்தி எழுதிக் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின், ஒரே நாளில் அந்த அனைத்து காமத்தளங்களும் காணாமல் போனதே.. இது எப்படி என்பதையும் அவர்கள் இந்த நேரத்தில் யோசித்துப் பார்க்கட்டும்.
மேற்கொண்டு அந்த வாரத்திய சைபர் கிரைம் கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளை வாசிக்கின்றபோது செம காமெடியாக இருந்தன.
“இ-மெயில் திருடப்பட்டால் போயே போச்சு.. ஒட்டு மொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்..”
“உங்கள் இ-மெயில் பாஸ்வேர்டை திருடுபவன், உடனடியாக வெளிப்பட்டுவிட மாட்டான்.. தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான்..”
“ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு அந்தத் தகவல்களைக் கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால், அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும்..”
“உங்களது தனி நபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்படும் பட்சத்தில் சோம்பேறித்தனப்படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள்.. இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்..”
இது மாதிரியான உண்மையான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் நானும், அருண் என்கிற பெங்களூரில் இருக்கும் நமது சக வலைப்பதிவரும் கடந்த இரண்டாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தோம்.
என்ன கொடுமை பாருங்க..?
இப்போது இந்த ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ‘சைபர் கிரைம்’ கட்டுரையின் மூலம்தான், இதுவெல்லாம் எங்களுக்குத் தெரிய வருகிறது.. இந்த மட்டுக்கும் அந்த எழுத்தாளர் தம்பிக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்..
என்ன செய்வது..? எங்கள் தலையெழுத்து இப்படி..? அவர் தலையெழுத்து அப்படி? சைபர் கிரைம் தலையெழுத்துதான் மேற்படி..
பொறுமையுடன் படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..!!!