அன்புள்ள இயக்குநர் சேரன் அவர்களுக்கு…
வணக்கம்ண்ணேன்..
உங்களைப் போன்ற சிறந்த தமிழ் இயக்குநர்களின் ரசிகர்களில் ஒருவனான, உண்மைத்தமிழன் எழுதுவது.
சினிமா பற்றிய கேள்வியறிவு எனக்குள் தோன்றியதில் இருந்து இன்றுவரை நான் சினிமா பார்ப்பதே, எனக்குள் பதிந்திருக்கும் சினிமா பற்றிய அறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளத்தாண்ணேன்.. இப்ப ‘மாயக்கண்ணாடி’ன்னு ஒரு படத்தை ரிலீஸ் பண்ணிருக்கீங்களாம்.. அது ஏதோ ‘அப்படி.. இப்படி..’ன்னு அரசல்புரசலா ஒரே டாக்குண்ணேன்..
சேரன் நம்ம அண்ணனாச்சே.. அப்டீல்லாம் செய்யமாட்டாரே.. என்னை மாதிரி போக்கத்தப் பசங்களுக்கேத்தாப்புல அட்வைஸ்தான செஞ்சிருப்பாரு.. அப்படின்னு நினைச்சிக்கிட்டே படம் பார்க்கப் போனேண்ணேன்.. அட நிஜம்தான்.. ஒரே அட்வைஸ் மழை.. போங்க..
சேரன் அண்ணே.. நீங்க தமிழ்நாட்டுல 36 வருஷமா இருந்தும் உங்களுக்கு ஒரு விஷயம் இன்னும் புரியல பாருங்க.. சினிமால அட்வைஸ் பண்ணா நம்ம தமிழ்நாட்டு ஜனங்களுக்குப் பிடிக்காதுங்கண்ணா.. ஏன்னா, சினிமாவை தமிழ் ஜனங்க பார்க்குற பார்வையே வேறங்கண்ணா..
பாதிப் பேரு சினிமாவுக்குப் போறது எதுக்குன்னா, கொஞ்சம் ஜாலியா டைம் பாஸ் பண்ணிப் பொழுதைப் போக்கலாம்னுதான்.. கொஞ்ச பேரு நம்ம சினிமாக்காரங்க.. ‘நீ மாயக்கண்ணாடி பார்த்தியா?’ன்னு ‘மஜா’ல கேக்கும்போது ‘இல்லை’ன்னு சொன்னா, அடுத்த ரவுண்டுக்கு ‘பாட்டில்’ கிடைக்காது பாருங்க.. அதுக்காக.. மிச்சம் பேரு.. ‘கைல, காசு இருக்கு.. என்ன பண்றதுன்னு தெரியல. எப்படியாவது செலவழிக்கணுமே’ன்னு வர்றாங்க..
இதுல கடைசியா என்னை மாதிரி சினிமா கிறுக்குப் பிடிச்ச ஆளுக.. நல்ல படத்தையெல்லாம் பார்த்தே தீரணும்ன்ற வெறில இருக்கானுக பாருங்க.. அவனுக..
சரிங்கண்ணேன்.. இப்ப உங்க ‘மாயக்கண்ணாடி’க்குள்ள போவோம்..
“எவனுக்கு எந்தத் தொழில்ல நல்ல அறிவும், திறமையும் இருக்கோ.. அவன் அந்தத் துறையிலேயே கடுமையா உழைச்சா, வாழ்க்கையில முன்னேறிடலாம். காசு, பணம் சேர்க்கலாம்.. நிம்மதியா வாழலாம்..” – இதைத்தான் மூணு மணி நேர படமா ஆக்கியிருக்கீங்க.. ஆனா பாருங்க, இங்கனதான் நீங்க மிஸ்டேக் பண்ணிட்டீங்க..
தமிழ்நாட்டு இளைஞர்கள்ல யாருங்கண்ணே இப்படியொரு முட்டாள்தனமான ஐடியாவோட இருக்கிறது..? அவனவன் இன்னிக்கி நைட்டே பணக்காரனாகி, நாளைக்கு காலைலேயே மெர்சிடிஸ் பென்ஸ்ல சுத்தணும்னு நினைக்குறான்.. நீங்க என்னடான்னா ‘கடுமையா உழைக்கணும்’கிறீங்க.. ஒத்து வருமாண்ணேன்.. ஆரம்பமே தகராறு பாருங்க..?
சரி கதைய விடுங்க.. இதை எப்படி கொண்டு போயிருக்கீங்கன்னு நீங்களே பாருங்க..
நவ்யாவைக் கூட்டிக்கிட்டு ECR ரோட்ல பறக்குறீங்க. ‘மாமா’கிட்ட மாட்டுறீங்க.. ‘மாமா’ பைன் கட்டச் சொல்றார்.. அவர்கிட்டப் போய் கெஞ்சுக்கிட்டிருக்கீங்க.. நீங்கள்லாம் சினிமா ஹீரோவாண்ணேன்..? அங்கனேய அந்த ‘மாமா’வைப் புரட்டி எடுத்திட்டு ‘வாடி’ன்னு லவ்வரை செல்லமாக் கூப்பிட்டுட்டு போயிருந்தீங்கன்னா, அங்கனயே ஒரு டூயட் பாட்ட வைச்சு கொன்னிருக்கலாம்.. விட்டுட்டீங்களேண்ணா..
உட்லண்ட்ஸ் தியேட்டர்ல பிளாக்ல டிக்கெட் வாங்கக்கூட காசில்லைன்னு சொல்லிட்டு பிரெண்டுக்கு போனை போட்டு “டிக்கெட்டுக்கு காசு இல்லை.. காச எடுத்திட்டு ஆட்டோ புடிச்சு வர்றியா?”ன்னு கேக்குறீங்களே.. உங்களுக்கு இன்னா கொழுப்பு..? டப்புன்னு அந்த பிளாக்ல டிக்கெட் விக்குற பொம்பளைகிட்ட டிக்கெட்டைப் பிடுங்கிட்டு.. “என்கிட்டயாடி காசு கேக்குற”ன்னு சொல்லி அந்தப் பொம்பளை முடிய கொத்தாப் புடிச்சு தியேட்டருக்கு வெளில தள்ளிட்டு, உங்க லவ்வரை ‘உள்ள’ தள்ளிட்டுப் போயிருந்தீங்கன்னா, நீங்க ஹீரோ.. விட்டுப்புட்டீகளேண்ணா..
உங்ககிட்ட தலையைக் கொடுக்குற ஆளுக பேசுற பேச்சைக் கேட்டு மதி மயங்குறீங்க.. மொதல்ல LIC ஏஜெண்ட்டாகலாம்னு பிளான் பண்றீங்க.. நீங்க குடியிருக்கிற வீட்டு ஓனர்கிட்ட, “உங்க கையால ஆரம்பிச்சா ராசியா இருக்கும்”னு சொல்றீங்க.. அவர் ஒரு போடு போடுறாரு பாருங்க.. “ஏன் உங்க வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”ன்னு.. அங்கனயே எந்திரிச்சு கைல ஒரு சொடக்குப் போட்டு, “ஜெயிச்சிட்டு வர்றேண்டா மவனே.. அப்புறம் பாரு, என் கையாலதான் உனக்குச் சங்கு”ன்னு ஒரு வசனம் பேசியிருந்தீங்கன்னா, நீங்க ஹீரோண்ணேன்.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
அப்புறம் சினிமா ஆசை வருது. டைரக்டர் ராஜ்கபூர் வரச் சொன்னாரேன்னு சொல்லிப்புட்டு அவரைப் பாக்கப் போறீங்க.. அங்க ராஜ்கபூரே தன்னோட அஸோஸியேட்டை அனுப்பி உங்களை பேசி அனுப்பி வைக்கச் சொல்றாரு.. (என்ன தைரியம்.. அப்படியே அச்சு அசலா உண்மையைச் சொல்லிப்புட்டீக.. டைரக்டர்ஸ் யூனியன்ல யாரும் ஒண்ணும் சொல்லலியாண்ணேன்..) அஸோஸியேட் என்ன கேக்கறாரு? “உனக்கு என்னத் தெரியும்னு?” நீங்க என்ன செய்றீங்க.. மொதல்ல முழிக்கிறீங்க. அப்புறமா நைஸா, “சொல்லிக் கொடுத்தா அல்லாத்தையும் செய்வேன்”னு சொல்றீங்க.. பட்டுன்னு அங்கன ஒருத்தன் குட்டிக்கரணம் போட்டுக் காமிச்சான் பாருங்க.. அது மாதிரி.. “யார்கிட்டடா கேக்குற என்ன தெரியும்?”னு சொல்லி அந்த அஸோஸியேட்டை பறந்து பறந்து சாத்திருந்தீங்கன்னா, நீங்க ஹீரோ.. விட்டுப்புட்டீகளேண்ணா..
அதே டைரக்டர் மறுபடியும் வரச் சொன்னவுடனே ஓடுறீங்க. நடிக்கச் சொல்லப் போறாங்கன்னு போனா, அங்கன நடிக்க வந்தவங்களோட முடியை வெட்டச் சொல்றாக.. ஏமாற்றத்தைத் தாங்கிக்கிட்டு வெட்டித் தொலையுறீங்க. அவரும் பாராட்டுறார்.. திரும்பவும் சான்ஸ் கேக்குறீங்க.. “உனக்குன்னு ஒரு வேஷம் அமைஞ்சா கூப்பிடுறேன்”றாரு டைரக்டர்.. சத்தம் போடாம திரும்பி வர்றீங்க.. இதுக்காண்ணே.. நாங்க படம் பார்க்க வந்தோம்..? டைரக்டரைத் தூக்கிப் போட்டு நாலு சாத்து சாத்திட்டு, “வர்றவனை அவமானப்படுத்தாதடா.. தூக்கி இடுப்புல வைச்சுக் கொஞ்சுடா..” அப்படீன்னு ஒரு டயலாக் வுட்டுட்டுப் போயிருந்தீங்கன்னா.. நீங்க ஹீரோ.. விட்டுப்புட்டீகளேண்ணா..
பார்க்ல ராத்திரி நவ்யா பக்கத்துல உக்காந்து பேசும்போது, ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்க நவ்யா.. “நீயெல்லாம் நடிக்கப் போறியா?”ன்னு.. அப்ப நீங்க என்ன பண்ணிருக்கணும்..? அப்படியே லெப்ட்ல ஒண்ணு.. ரைட்ல ஒண்ணுன்னு விட்டுட்டு ‘அடங்காதவளை அடக்க வந்த ஆணழகன் நானுன்னு’ ஒரு பாட்டையும், பாடியிருந்தீங்கன்னா, நீங்க ஹீரோ.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
நவ்யாவோட அப்பா(நடிகர் விக்ரமோட நிஜ அப்பாவாம்ல.. நல்லாத்தான் நடிச்சிருக்காரு) உங்களுக்கு சோத்தையும் போட்டுப்புட்டு, “ஒரு வருஷத்துக்குள்ள ஒரு லட்சம் ரூபாயை சம்பாதிச்சுக் காட்டு. அப்புறம்தான் என் பொண்ணைத் தருவேன். அதுவரைக்கும் என் பொண்ணுகூட எங்கயாச்சும் உன்னைப் பார்த்தேன்.. அப்படியே பஸ்ஸை உன் மேல ஏத்தி பிரேக் பெயிலியர்ன்னு 5000 ரூபாய் பைன் கட்டிட்டு வெளில வந்திருவேன்”னு சொல்றாரு பாருங்க.. என்ன நெஞ்சழுத்தம் அவருக்கு..? ஒரு ஹீரோவைப் பார்த்து பேசுற பேச்சாண்ணே இது? அப்படியே அந்தத் தட்டை அவர் மூஞ்சில வீசி எறிஞ்சு “யோவ் மாமா.. இனி நான் இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேன்யா. நீதான் ‘என் மகளைக் கட்டிக்க’ன்னு என் கால்ல விழுந்து அழுகணும்.. அழுவ.. அழ வைப்பேன்யா..”ன்னு வீர வசனம் பேசிட்டு கிளம்பியிருந்தீங்கன்னா.. நீங்க ஹீரோ.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
ராதாரவி உங்களை வேலைல இருந்து தூக்குறார். “வெளில போடா..”ன்னு சொல்றாரு.. ஒரு ஹீரோவா இருந்தா என்ன செஞ்சிருக்கணும்.. தொடைல அடிச்சு ஒரு சபதம் செஞ்சுட்டு வந்திருக்க வேணாம். காமெடியன் மாதிரி மூஞ்சியை வைச்சுக்கிட்டு நவ்யாவைத் தேத்திக்கிட்டு, ப்ரெண்ட்ஸ்கிட்ட, “நீங்க போய் வேலையைப் பாருங்கடா”ன்னு சொல்லிக்கிட்டு.. ச்சே.. என்ன ஹீரோன்னே நீங்க..
வரும்போதும், போகும்போதும் 500 ரூபாய் டிப்ஸ் கொடுக்குற அந்தப் பெரியவரைப் போய் பாக்குறீங்க. ஒரு செயின் கீழ கிடக்குது. அதை எடுத்துப் பாக்கெட்டுல போட்டுட்டு பெரியவரை மாடில போய் பாக்குறீங்க. அவர் “உங்களுக்கு வேலை கொடுக்குறேன்”னு சொன்னவுடனே.. உங்க பாக்கெட்ல இருந்து செயினை எடுத்து, “ஹால்ல கிடந்துச்சு ஸார்”ன்னு சொல்லிக் கொடுக்குறீங்க.. இந்த ஷாட்ல தியேட்டர்ல இருந்த 40 பேர்ல, என்னோட சேர்த்து 20 பேர் அவசரத்துல மதி மயங்கி கை தட்டுனோம்ண்ணே..
இங்கனயும் ஒரு தப்புண்ணே.. இதே செயினை எடுத்திட்டுப் போய் நவ்யாகிட்ட கொடுத்து அழகு பார்த்துட்டு அதுக்கப்புறம் நவ்யாவை வீட்டுக்கு அனுப்பிட்டு, நீங்க மட்டும் தனியா உட்கார்ந்து திருடிட்டோமேன்னு ஒரு பீலிங்ல குலுங்கி, குலுங்கி அழுதிருந்தீங்கன்னா ‘இது படம்’.. ‘இது காவியம்’னுட்டு நாலு பேரு பாராட்டிருப்பான்.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
அந்தப் பெரியவர், உங்களை முதல் வேலைக்கு அனுப்பும்போது ஹெராயினைப் பாத்துர்றீங்க.. பாத்துப்புட்டு எதுக்குண்ணே தேவையில்லாம அவருக்கே போனை போட்டு அழுவுறீங்க. அப்படியே நீங்களும் ஹெராயினை ஒரு இழு, இழுத்துட்டு, பக்கத்துல ஒரு கிளப்புக்கு போயி நாலு பிகர்களோட ‘மங்காத்தா’ ஆட்டம் ஆடியிருந்தா நீங்க ஹீரோ.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
அந்தப் பொண்ணு நவ்யாவுக்கு உங்களை மாதிரி காசு, பணம் சேர்க்கணும்ன்ற ஆசையெல்லாம் இப்ப இல்லண்ணேன்.. தனக்குக் கணவனா வரப் போற குமார்ங்கற நீங்க, உங்க ஆசைப்படி பெரிய ஹீரோவாகணும். பார்த்தீங்களா.. ஒரே நிமிஷத்துல உங்க மனைவியா வரப் போறவங்களோட எதிர்பார்ப்பும், லட்சியமும் உங்களைச் சுத்தி விழுந்து போச்சு. இந்த ஒரு இடத்துலதாண்ணே நீங்க புல்ஸ்டாப்கூட இல்லாம அப்படியே ரங்கு ராட்டினம் மாதிரி சுத்திட்டீங்க.. எனக்கும் இந்தப் படத்துலேயே ரொம்பப் புடிச்ச சீன் இதுதாண்ணேன்..
அந்த டைரக்டரோட மனைவிக்கு அவுக வீட்டுக்கே போய் அழகு பண்ணி விடுறாங்க நவ்யா. அப்படியே பேச்சோட பேச்சா.. உங்களுக்கு நடிக்க சான்ஸ் கேக்குறாங்க.. ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திப் பேசும்போது டைரக்டரோட மனைவிக்கு நவ்யா செய்கின்ற அழகு சிகிச்சை.. கடைசில வாய்ப்பு கேட்கும்போது கரெக்ட்டா காலைப் பிடிச்சுக் கேக்குற மாதிரி டச்சிங்கா வைச்சிட்டீங்க பாருங்க.. நீங்க பெரிய ஆளுதாண்ணேன்..
ஆனா அந்த ஷாட்ல மட்டும் நவ்யாவை அழுக வைச்சு, காலைப் பிடிச்சு கதற வைச்சு.. அந்த டைரக்ரோட மனைவியும் “வரப் போற புருஷனுக்காக இப்படி பாடுபடுறியே”ன்னு அவளும் சேர்ந்து அழுதிருந்தா பர்ஸ்ட் ஷோவுக்கு வந்திருந்த பொம்பளைங்க கூட்டம், வெளில போய் ஒப்பாரி வைச்சு, அப்படியே ஊர் முழுக்கப் பரவி, அடுத்த ஷோவுக்கு ஊர்ல இருக்குற பொம்பளைங்க அத்தனை பேரும் தியேட்டர் வாசல்லதான் கிடந்திருப்பாங்க… விட்டுட்டீங்களேண்ணா..
அம்மா ஆஸ்பத்திரில கிடக்க, ஆபரேஷனுக்கு பணம் புரட்ட அல்லல்படுறீங்க. எல்லாரும் தர்றதுக்கு யோசிக்கிறாங்க. எப்படிண்ணே இந்தக் காலத்துல தருவாங்க..? பெரியவர்கிட்ட போறீங்க.. கேக்குறீங்க. “டீலிங்குக்கு ஒத்துக்குறியா?”ன்னு கேக்குறார். நவ்யாகிட்ட, “அம்மாதான் பெரிசு”ங்குறீங்க. “அப்ப நானு?”ங்குறாங்க அவுங்க. காதலைத் தூக்கியெறிஞ்சுட்டு கஞ்சா விக்கப் போறீங்க.. போலீஸ் துரத்துறாங்க.. அப்படியே லாரில பறந்தாச்சும் தப்பிச்சிருக்கணும்னே.. அவன்தாண்ணே ஹீரோ.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
சரி.. நேரம் சரியில்ல. மாட்டுறீங்க.. போலீஸ¤ம் உங்களுக்கு லாடம் மாட்டுது. 3 வருஷம் ஜெயில்ன்னு உள்ள போறீங்க.. இந்தக் கோர்ட்டு சீன்லேயும், ஜெயில் சீன்லேயும் உங்கம்மாவை அழுகையோ அழுகைன்னு அழுக வைச்சு, உருக்கமா அவுகளைப் பத்தி ஜெயிலுக்குள்ள இருந்து ஒரு பாட்டு பாடியிருந்தீங்கன்னா, ஆடியன்ஸ் கடைசிவரைக்கும் இருந்திருப்பாங்களே.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
நவ்யா தனக்கு வேற மாப்பிள்ளை வேணாம்னு சொல்லி போட்டோவைத் தூக்கிப் போட்டுட்டு அலம்பல் பண்றாங்க பாருங்க.. அப்ப என்ன வசனம் எழுதிருக்கீங்கன்னு ஞாபகமிருக்கா உங்களுக்கு..? “நான் அவன்கூட நெருங்கிப் பழகிருக்கேன்.. கட்டிப் பிடிச்சிருக்கேன்.. கிஸ்கூட பண்ணிருக்கேன்..” – ஒரு கல்யாணமாகாத தமிழ்நாட்டுப் பொண்ணு, அப்பன், ஆத்தாகிட்ட பேசுற பேச்சா இது?
(‘தமிழ்க் கலாச்சாரக் காவலர்கள்’ இன்னமும் இந்தப் படத்தைப் பார்க்கலை போலிருக்கு. பாத்தாங்கன்னா, அந்தப் பக்கமும் உங்களுக்கு மாத்து இருக்குண்ணே..)
இதையே, “எப்படி முத்தம் கொடுத்தேன்னு உங்களுக்குத் தெரியுமாப்பா?”ன்னு நவ்யா அவுக அப்பன்கிட்ட கேட்டு, அவர் முன்னாடியே அவுக அம்மாவையே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்க வைச்சு எடுத்திருந்தீங்கன்னா, இது ‘காலத்தால் அழிக்க முடியாத பின் நவீனத்துவமான படம்’னு சொல்லிப்புட்டு அறிவுஜீவிகள்லாம் உங்களுக்கு சப்போர்ட்டுக்கு ஓடி வந்திருப்பாக.. விட்டுப்புட்டீங்களேண்ணா..
கடைசில ஜெயில்ல இருந்து வெளில வர்றீங்க.. இங்கனதான் பாருங்க.. படம் பார்த்த அல்லாரும் நவ்யா போட்டிருந்த டிரெஸ் என்ன கலரு? வாசல்ல உங்களைக் கூட்டிட்டுப் போக வந்த பெரியவர், என்ன கண்ணாடி போட்டிருக்கான்னு பார்த்துட்டு மியூஸிக்கை கோட்டை விட்டுட்டாக போலிருக்கு.. இந்த இடத்துல இசைஞானி இளையராஜா தனியா தெரிஞ்சார்ண்ணே எனக்கு.. ஆனா நீங்க..
அப்படியே நவ்யா கண்ணு மூலமாவே நீங்க பெரியவரை நோக்கிப் போறதைக் காட்டி நவ்யா அழுகுறதைக் காட்டி.. நீங்க பெரியவர்கிட்ட “நான் இனி உங்க பக்கம் வரவே மாட்டேன். உங்க கடனை எப்படியாச்சும் அடைச்சிருவேன்”னு டயலாக் விட்டுட்டு நவ்யாவை பார்க்க.. நவ்யாவும் ஏறெடுத்துப் பார்க்க ‘சுபம்’னு நினைச்சு டக்குன்னு நாலு பேரு எந்திரிச்சுப் போயிட்டாண்ணேன்..
இப்படியா எடுக்கிறது?
நீங்க நேரா போய் அந்தப் பெரியவரை நாலு சாத்து சாத்தி எதையாவது எடுத்து அவரைக் குத்தப் போய் அப்போ நவ்யா “குமார்.. குமார்”ன்னு கத்தி.. கதறி.. அழ.. அப்படியே slowmotion-ல நீங்க திரும்பி ஜெயிலையும், நவ்யாவையும் மாறி மாறிப் பார்த்துட்டு.. ‘இன்னொரு தடவை ஜெயிலுக்குப் போக விருப்பமில்லை’ன்னு சொல்லாம சொல்லிட்டு.. பெரியவர்கிட்ட “பொழைச்சுப் போ.. உன்னைக் கொன்ன பாவம் எனக்கு வேணாம்”னு ஒத்தை வரில டயலாக் பேசிட்டு திரும்ப… நவ்யா ஓடி வந்து கட்டிப் பிடிச்சிருந்துச்சுன்னு வைச்சுக்குங்க.. இருக்குற கொஞ்ச நஞ்ச பேரும் எந்திரிச்சு நின்னு கை தட்டிருப்பாங்கண்ணேன்… விட்டுட்டீங்களேண்ணா..
திரும்பவும் ஒரு ரெண்டு ரீலுக்கு அட்வைஸ் மழை பொழிஞ்சீங்களே இதுதான் இந்தப் படத்துலேயே மன்னிக்க முடியாத குற்றம்.. ஒரு மனுஷனுக்கு ஒரு தடவைதாண்ணே மரண தண்டனை கொடுக்கணும்.. நீங்க மூணு தடவை ஒரே ஆளை தூக்குல போட்டுட்டீங்க.. எதுனாச்சும் புண்ணியம் கிடைக்குமா? சொல்லுங்க..
ராதாரவி அண்ணன் சொல்றது சரிதான்.. “உனக்கு எது நல்லா வருதோ.. நல்லாத் தெரியுதோ.. எதுல நல்ல திறமைசாலியா இருக்கியோ.. அந்தத் துறையைக் கப்புன்னு புடிச்சிட்டு அதுலயே மேல வா.. ஆனா அதுக்கு கொஞ்சம் காலமாகும். உடனே முன்னேறணும்னு நினைக்காத. ஏன்னா நாமெல்லாம் மனுஷங்க..” அப்படீன்னாரு.. சூப்பர்ண்ணேன்..
என் வாழ்க்கையில கூட இப்படித்தாண்ணே.. பத்து வருஷத்துக்கு முன்னாடி மதுரை சொக்கிகுளத்துல ஒரு கம்ப்யூட்டர் சென்டரை என் கைல கொடுத்து “மாசமாசம் எனக்கு பணத்தைக் கொடுத்து கழிச்சிக்க.. உனக்கு நல்ல பிரெண்ட்ஷிப் இருக்கு. நல்லாவும் பழகுற. உன் பழக்கத்துக்கு இந்த DTP சென்டர் எங்கயோ போயிரும்.. விட்ராத..” அப்படின்னு ஒரு உலகமகா இளிச்சவாயன் படிச்சுப் படிச்சுச் சொன்னாரு.. கேட்டனா? கேட்டானா இந்த உண்மைத்தமிழன்..
“அடுத்த இயக்குநர் சிகரம் நான்தான்.. மணிரத்னத்துக்கு நான்தான் அடுத்து கதை சொல்லப் போறேன்.. கமலஹாசன் எனக்காக ஆழ்வார்பேட்டை சிக்னல்ல காத்துக்கிட்டிருக்கார்ன்னு” ‘மாயக்கண்ணாடி’ல பார்த்து ஓடி வந்தனே.. என்னாச்சு..? வயசு 37 ஆகியும் இன்னும் பிச்சைதான் எடுத்துக்கிட்டிருக்கேன்.. ஒழுங்கு மரியாதையா அந்த DTP சென்டரை வாங்கி நான் ஓட்டிருந்தா.. இந்நேரம் இந்த உண்மைத்தமிழன் வாழ்க்கைல செட்டில் ஆயிருப்பானே…
என்னடா இவன் ஒருத்தன் உண்மையை ஒத்துக்கிட்டானேன்னு நினைக்கிறீங்களா? எனக்கு மனசு இருக்கு.. ஒத்துக்கிட்டேன்.. எல்லாரும் என்னைய மாதிரி இருக்க மாட்டாங்களே.. சரி விட்டுத் தள்ளுங்க..
அப்புறம், நுணலும் தன் வாயால் கெடும்னு சொல்வாங்க அது மாதிரி.. என்னிக்கோ நீங்க சொன்ன ஒரு வார்த்தை, இன்னிக்கு பாருங்க.. சமயம் பார்த்து திருப்பியடிக்குது..
‘புரட்சிப் புயலோட’ ஒரு மேடைல உக்காந்து “மெரீனா பீச்ல இனிமே சமாதி கட்டுறதை நிறுத்தித் தொலைங்கப்பா..” அப்படீன்னு குரல் கொடுத்தீங்க பாருங்க. ஞாபகமிருக்கா..? இது உங்களுக்குத் தேவைதானா? அதோட விட்டீங்களா?
அவுக சேனலுக்கு உங்களோட படங்களைக் கேட்டாங்க.. ‘ராஜராஜ சோழன் பரம்பரை நாங்க’ன்ற தோரணைல இருக்குறவங்ககிட்ட போய், “என் படத்தை வாங்கணும்னா, மொதல்ல உன் மொதலாளியை படம் பார்க்க வரச் சொல்லு.. அப்பறமா என்கிட்ட படத்தைப் பத்திப் பேசச் சொல்லு. அதுக்கப்புறம் எனக்குப் பிடிச்சிருந்தா உன் சேனலுக்குத் தர்றேன்..” – இப்படி தமிழ்நாட்டுல இருக்குற எவனாச்சும் சொல்வானா? சொல்லிருக்கீங்களேண்ணா.. உங்களுக்கு அப்ப கிறுக்குப் பிடிச்சிருந்துச்சுன்னு நினைக்கிறேண்ணே..
நம்ம அரசியல்வாதிகளைப் பத்தித்தான் உங்களுக்கே தெரியுமே? ஆட்சிக்கு வந்துட்டா(அது யாராக இருந்தாலும்) தான்தான் ஆண்டவன்னு நினைக்கிறவங்க நம்மாளுங்க.. விடுவாங்களா.. அதான் இப்ப சமயம் பார்த்துப் போட்டுத் தாக்குறாங்க.. ‘மாயக்கண்ணாடி ரஸம் போன கண்ணாடி’.. ‘மாயக்கண்ணாடில ஒரு மாயமும் இல்ல.. வெங்காயந்தான் இருக்கு’ன்னு.. சரி விடுங்கண்ணேன்.. பழுத்த மரம்தான கல்லடி படும்..
ஆனாலும்ண்ணேன்.. சூப்பர்ஸ்டாருக்கும், சூப்பர் ஆக்டருக்கும்கூட வராத தைரியம் உங்களுக்கு வந்திருந்துச்சு பாருங்க.. இதுதான் தன்னம்பிக்கை.. கூடவே ஒருசில விஷயத்துக்காக உங்களைப் பாராட்டவும் செய்யணும்ணேன்.. அது என்னன்னா…?
1. இந்தப் படத்துல உங்களுக்குப் பதிலா வேற யாராச்சும் ஒரு ஹீரோ நடிச்சிருந்தா அவ்ளோதான்.. கதையைக் கந்தலாக்கியிருப்பாங்க.. “உழைச்சு முன்னேறுங்கடா”ன்னு கதைய வைச்சுக்கிட்டு அந்த ஹீரோவோட ரசிகர்கள் ஸ்கூல், காலேஜை கட் அடிச்சிட்டு தியேட்டர் வாசல்ல கட்அவுட் வைச்சிருப்பாக. கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செஞ்சிருப்பாக.. மாலை போட்டு வாழ்த்திருப்பாக.. பத்தாயிரம் வாலா சரவெடி வெடிச்சிருப்பாக.. வீட்ல அவுங்கவுங்க அம்மா, அப்பா வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி சேர்த்து வைச்சிருந்த பணத்தைத் திருடிட்டு வந்து இப்படி உங்களுக்காகக் கொட்டிருப்பாக.. இந்தப் பழி, பாவத்துல இருந்து தப்பிச்சிட்டீங்கண்ணே.. தப்பிச்சிட்டீங்க..
2. படத்துல நடிச்ச பொம்பளைங்கள்ல ஒருத்தர்கூட தன்னோட தொப்புளைக் காட்டலண்ணே.. எனக்கு அம்புட்டு ஆச்சரியம் போங்க.. அநேகமா இந்த வருஷத்துலேயே இந்த ஒரு படம்தான் இந்தச் சாதனையைச் செஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இதுக்காகவும் என்னோட ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்ண்ணேன்..
3. அப்புறம் பாருங்க.. இந்தக் குத்துப் பாட்டு, குத்து டான்ஸ்.. டபுள் மீனிங் டயலாக்கு, காதைக் கிழியற மாதிரி சவுண்டு போட்டு அடிதடி, பைட்டு, முட்டாள்தனமான சீனுன்னு எதையும் வைக்காம குடும்பத்தோட பாக்குற மாதிரி எடுத்திருக்கீங்க பாருங்க.. அதுக்கொரு தேங்க்ஸ¤..
4. இந்தப் படத்தோட சென்னை சிட்டி, NSC ஏரியா உரிமையை 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கணும்னு நினைச்சீங்க பாருங்க.. நீங்கதாண்ணேன் ஹீரோ.. அதுலேயும் ரிலீஸ் தேதிக்கு மொதல் நாள் நடுராத்திரி பிரசாத் லேப் வாசல்ல நின்னு போன் மேல போன் போட்டு பணத்துக்கு அலைஞ்சீங்களாமே.. உங்களை மாதிரி நல்ல மனுஷங்களை என்னைக்குமே ஆண்டவன் கைவிட மாட்டாண்ணே.. உங்களோட குருநாதர், பலசாலி நடிகர், அடுத்தத் தயாரிப்பாளர்ன்னு எல்லாரும் நடு ராத்திரிலயே கை கொடுத்து கடனா கொடுத்தப் பணத்தை செட்டில் பண்ணி படத்தை ரிலீஸ் பண்ணிருக்கீங்க.. “நான் இயக்கிய படத்தை நானே முன் வந்து வாங்கலைன்னா, வேற எவன்யா வந்து வாங்குவான்”னு அந்த அர்த்தராத்திரில சத்தம் வேற போட்டீங்களாமே.. உங்களுக்குள்ள தன்னம்பிக்கை ஊற்றே இருக்குன்னு நான் நினைக்கிறேண்ணே..
5. இப்ப அந்த 1.50 கோடில பாதிகூட வராதுன்னு தெரிஞ்சப்புறமும் தைரியமா ‘மறுபடியும் ஜெயிப்பேன்’னு சொல்றீங்க பாருங்க.. இதுதாண்ணே சேரன். இனி அந்தக் கடனை நீங்க எப்படி அடைக்கப் போறீங்கன்னு எனக்கே தெரியலை. ஏன்னா எனக்கு இருக்குற 1 லட்சம் கடனுக்கே எனக்கு பாதி நாள் தூக்கம் வர மாட்டேங்குது.. உங்களுக்கு எப்படிண்ணேன்..?
6. சரி விடுங்க.. ‘இப்பத்தான் புதுசா சேரன்னு ஒருத்தனா வந்திருக்கேன். அடுத்த படம்தான் என் முதல் படம்’னு மனசுல நினைச்சுக்கிட்டு ஆக வேண்டியதைப் பாருங்க.. மீதிய ஆண்டவன் பார்த்துக்குவான்..
7. கடைசியா சேரன் அண்ணே.. ஒரு சின்ன விஷயம்.. இவ்ளோ தூரம் யோசிச்சு, என் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டு, கற்பனை குவியலுக்குள் முத்துக் குளித்து உங்களுக்கு ஒரு கடுதாசியை எழுதியிருக்கேன்.. என் திறமையை பார்த்துக்குங்கண்ணேன்.. உங்களோட அடுத்தப் படத்துல ‘கதை, திரைக்கதை, வசனம்’ – இப்படி எதுக்காச்சும் எழுதுறதுக்கு இந்த உண்மைத்தமிழனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தீ……………………