என் இனிய வலைத்தமிழ் மக்களே..
சமீப காலமாக நான் ‘உயிர்மை‘ புத்தகத்தை வாங்கியவுடன் முதலில் படிக்கத் துவங்கியது பெரியவர் திரு.பாரதிமணி அவர்களின் கட்டுரையைத்தான்.
இப்படி ஒரு பெயரில் ஒரு எழுத்தாளரா என்றெண்ணிதான் அவருடைய கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்.. அது கற்கண்டாக இனிக்கத் துவங்கியது எனக்கு.. இந்தப் புது எழுத்தாளர் யார் என்று விசாரித்து தெரிந்து கொண்ட பின்பு, “அவரா இவரு..” என்ற ஆச்சரியமும் எனக்குள் தோன்றியது.
எழுத்து நடை எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் என்னை பெரிதும் கவர்ந்தது. அதிலும் புதுதில்லியின் சுடுகாட்டை பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரை அவர் எழுத்திலேயே சிறந்தது என்று நான் சொல்வேன். அக்கட்டுரையின் பாதிப்பு எனக்குள் ஏனோ பல நாட்கள் நீடித்திருந்தது. இந்தப் பெரியவரை எனக்கு முன்பே தெரியும் என்றாலும் நேரில் பழக்கம் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையும் அப்பன் முருகன் புண்ணியத்தில் சமீபத்தில் தீர்ந்து போனது.
ஒரு பின் மாலைப்பொழுதில் ஆரம்பித்து இரவு வரையிலும் அவருடன் இருந்து, கலந்து பேசி அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையும் கேட்டுத் தெரிந்ததில் எனக்குள்ள பிரமிப்பு இன்னமும் அப்படியே உள்ளது.
நாடக நடிகராக, சினிமா நடிகராகவெல்லாம் அவரை அறிந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போது எழுத்தாளர் என்கிற அவதாரத்திலும் இவரை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறது. அந்த நன்னாள் பற்றி ஐயா எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தை இங்கே பெருமகிழ்வுடன் பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
பல நேரங்களில் பல மனிதர்கள்.
திரு.உண்மைத்தமிழன்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கடந்த வருடத்தில், நான் ‘உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், ‘தீராநதி’யில் எழுதிய ஒரு கட்டுரை, ‘அமுத சுரபி’யில் எழுதிய 4 கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற தலைப்பில் ‘உயிர்மை பதிப்பகம்’ வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..
புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம். தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோகமித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!
இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!
போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியவன் என்றுதான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?
இதைப் படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.
பாரதி மணி
எனக்கும் வேலை வைக்காமல் தாங்களே சொல்லியிருப்பதுபோல் “வாழ்த்த வயதில்லை ஐயா, வணங்குகிறேன்..” என்று முதல் நபராகச் சொல்லி வாழ்த்துகிறேன்.. தங்களுடைய புத்தகம் விற்பனையில் சாதனை படைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ‘சரக்கு’ நன்றாக இருந்தால், அது எந்த நாடாக, எந்த இடமாக இருந்தாலும் விற்றே தீரும் என்பது தாங்கள் அறியாததல்ல..
மீதியை புத்தக விமர்சனத்தில் வைத்துக் கொள்கிறேன்.)))))))))))))))
நன்றி..