Archive for the ‘ஆஸ்கர் பரிசு’ Category

ரஹ்மானின் ஆஸ்கார்! முதல் காரணம் இளையராஜாதான்..!

பிப்ரவரி 26, 2009


26-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1989 தீபாவளி சமயம். ‘கவிதாலயா’ நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.

‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக ‘கவிதாலயா’ காத்திருந்தது.

அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை.. கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.

‘புதுப்புது அர்த்தங்களில்’ இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க.. அதேபோல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க ‘கவிதாலயா’ முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.

ஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, ‘நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு.. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க…’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.

இதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட ‘கவிதாலயா’, இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.

கோபம்தான்.. சட்டென்று எழுந்த கோபம்.. படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது.. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.

மறு ஆண்டு. மும்பை.. ‘தளபதி’ திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான்.. அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.

ஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது.. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது.. நிற்க.. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான்.. நிமிட நேரம் கோபம்தான்.. தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்..

இந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்..! ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்..! இறைவனின் விருப்பமும் இதுவே..!

இப்போது மணிரத்தினத்திற்கும் இதே எண்ண அலைகள்தான்.. தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்..


இந்த நேரத்தில்தான் கே.பி. தனது ‘கவிதாலயா’ நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும்போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ்மேனன், ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்தினத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ்மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போ்ட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, ‘கவிதாலாயா’ நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம். இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று..!

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப்-ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் ‘கவிதாலயாவின்’ தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க.. சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று..!

‘தளபதி’வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம்.. இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்தினமும் உணர்ந்தார்கள்.


‘ரோஜா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ‘சோழா ஹோட்டலில்’ நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான்கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது…” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர்.. மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர்.. இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது ரஹ்மானின் திறமைதான்..

ராஜீவ்மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்..

இதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல்போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்..

இந்த ‘ரோஜா’ வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்..

இதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை.. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல்.. கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது..

வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா..? ‘சின்னச் சின்ன ஆசை’ உருவாகியிருக்குமா..? அது இயக்குநரின் கற்பனையாச்சே..! யோசித்தால் நடந்தும் இருக்கலாம்., அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவி.எம். நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்?” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ்மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவி.எம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.


ரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய..!!!

‘சிந்துபைரவி’ படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்..?

‘தளபதி’ படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்..?

ஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே..? அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே..? நாம் நிச்சயம் இழந்திருக்கிறோம்..!

ஆனால், ‘எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்’ என்பார்கள். ‘எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்’ என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.

இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை..

இந்தியாவுக்கே சிறப்பு..

தமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்..

எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!

எல்லாம் இறைவன் செயலே..!