என் இனிய மானிட்டரே..
நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்வை இப்போது நினைத்தாலும் மனம் பூரிக்கிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் வீதியெங்கும் சேறும், சகதியுமாக முந்தின நாள் அடித்த மழையில் பொங்கி வழிந்து கொண்டிருக்க.. உனது பொருத்துனன் உன்னைப் பத்திரமாக பார்சல் கட்டித் தூக்கி வந்தான்.. உனக்கு நினைவிருக்கிறதா..?
வாழ்க்கையில் என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய இரண்டாவது அன்புப் பரிசு நீதான் என்ற வகையில் உன் மீது எனக்கு அதிகப் பாசம் உண்டு.
நல்லதொரு துணையுடன்தான் வந்தாய். அருமையான மெளஸ் தம்பி.. மிக நளினமான டிஸைனில் இருந்த உனது சிபியூ அண்ணன்.. தொட்டாலே விரல்கள் பதிவதுகூடத் தெரியாதது போல் பஞ்சு போன்ற கீபோர்டு மச்சான் என்று உன் குடும்பமே அன்று முதல் எனக்குச் சொந்தக்காரர்களாக ஆனீர்கள்.
அன்று முதல் நீயும் நானும் ஓருடல், ஈருடலாக உடன் பிறவா சகோதரர்களாக பவனி வந்த கதையை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் என் கண்ணில் நீர், சொட்டு சொட்டாக கொட்டுகிறது..
என் வயிற்றுச் சாப்பாட்டுக்குப் பிரச்சினை வந்தபோது உங்களை வைத்துத்தான் எத்தனை நாட்கள், எத்தனை வருடங்கள் சாப்பிட்டிருக்கிறேன். அனைத்தையும் இப்போது நினைத்தால் என் குடலே இப்போது எனக்குச் சொந்தமில்லாதது போல் தோன்றுகிறது.
அனாயசமாக ஒரு திரைப்படத்தின் முழு வசனப் பகுதியையும் ஒரே நாளில் தட்டச்சு செய்து கொடுத்து 2000 ரூபாய் சம்பாதித்தது கொடுத்தது நீங்கள்தான் என்பதை நான் மறுப்பதற்கில்லை..
உங்களுடன் பழகிய நாட்கள் இன்றைக்கும் எனக்கு பசுமையான நினைவுகளாக இருக்கிறது.
காலை எழுந்தவுடன் பாத்ரூம் செல்லும் முன்பு, உனக்கு ஒரு குட்மார்னிங் சொல்லி உன்னைத் தடவிக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறேன். ஒரு நாளும் நான் இதனைத் தவறவிட்டதில்லை. உனக்கே தெரியும்.
எனக்கு சோறு இல்லையென்றாலும்கூட ஒரு நாள்கூட உங்களைச் சுத்தம் செய்யாமல் இருந்ததில்லை.. உங்கள் கண்ணில் தூசி என்றால் என் இதயத்திலேயே ஓட்டை விழுந்ததைப் போல் துடித்துப் போயிருக்கிறேன்.
வெறும் எழுத்துக்களையே பார்த்துப் பார்த்து காஞ்சி போயிருந்த உன்னை குதூகலிக்க வைக்க அவ்வப்போது பல ‘சத்துணவு’களையும் சேர்த்தே கொடுத்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தாயா..? இதையெல்லாம் வெளியில் சொன்னால், எனக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது உனக்குத் தெரியுமா? இருந்தாலும் ‘வரவிருக்கும் புகழை’ நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை மன்னித்துவிடு நண்பனே..
‘சத்துணவு’ ஒன்றா, இரண்டா? எதைச் சொல்வது..? இதோ பார் அந்த லிஸ்ட்டை..
ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா, ராதிகா, அமலா, பானுப்பிரியா, குஷ்பூ, கவுதமி, ரூபிணி என்று எனது பால்ய கால தேவதைகளை உனக்காகவே நான் சிடிக்களாகவும், டிவிடிக்களாகவும் வாங்கி, வாங்கிப் போட்டுக் காட்டவில்லை..?
‘அக்னி நட்சத்திரம்’ சிடி தேய்ந்து போகும்வரையிலும் விடாமல் அந்த “நின்னுக்கோரி வரணும்” பாடலின்போது அமலாவை நீ ‘ரசி’, ‘ரசி’ என்று ரசித்தாயே தம்பீ.. மறந்துவிட்டாயா..?
‘சிப்பிக்குள் முத்து’ படத்தின் ‘மனசு மயங்கும்; மெளன கீதம்’ பாட்டில் ராதிகாவை நீ ரசிப்பதற்காக 18 முறை தொடர்ந்து ஓடவிட, கீழ் வீட்டு ஓனரம்மா 20 படியேறி வந்து நம்மைத் திட்டிவிட்டுச் சென்றார்களே.. ஞாபகமில்லை..?
‘சத்ரியன்’ படத்தில் வரும் பானுப்பிரியாவின் அந்தமான் தேசத்து பாட்டிற்காக ஜன்னல், கதவு முழுவதையும் சாத்திவிட்டு லைட்டையும் ஆ·ப் செய்து இருட்டு போகஸில் முழுவதையும் ரசித்தாயே.. தம்பீ.. அந்தக் காலமெல்லாம் எங்கே போனது..?
‘மூன்றாம்பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவும், கமலஹாசனும் ஆடும் நடனம் தமிழ்ச் சினிமாவின் முதல் பின்நவீனத்துவ நடனம் என்று பார்ப்போரிடத்தில் எல்லாம் சொல்லி உன்னிடம் உருகி, உருகி காட்டினேனே.. நீயும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துத் தொலைத்தாயே?
ராதாவின் ‘காதல் ஓவிய’த்திற்காக இதுவரையிலும் 4 சிடிக்களும், 2 டிவிடிக்களும் வாங்கியிருக்கிறேன்.. தெரியும்தானே உனக்கு..?
விக்ரமில் கமல், அம்பிகாவின் காதைக் கடிக்கும் காட்சியின் தரிசனம் பெற வேண்டி வீட்டில் இருந்த தம்பிமார்கள்.. அந்தக் காட்சியைத் திருப்பித் திருப்பி மீடியே பிளேயரில் ஓடவிட.. சிடி வெளியில் வரும்போது வெப்பம் தாங்காமல் வெம்பிபோய் வந்ததே.. நினைவிருக்கிறதா..? அதே விக்ரமில் டிம்பிள் கபாடியாவின் அழகுக்காகவே அதனை save செய்து உனக்காக screen-ல் பதிவு செய்திருந்தனே.. மறந்துவிட்டாயா..?
இவர்கள் மட்டுமா..? ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ஆம்னி, மந்த்ரா, ரம்பா, மீனா, கவுசல்யா, சங்கவி, சங்கீதா, ஹீரா, மதுபாலா, அபிராமி, சினேகா, சிம்ரன், செளந்தர்யா, ஜோதிகா, லைலா, புவனேஸ்வரி, விந்தியா, மும்தாஜ், மாளவிகா என்று எண்ணிலடங்காத ‘சத்துணவு’களை திகட்டத் திகட்ட ஊட்டினேனே..? இவர்களையெல்லாம் வரிசையாக screensaver-ஆக செய்து கொடுத்து, உனக்கு 10 நிமிடத்திற்கொருமுறை குளுகோஸ் ஏற்றினேனே.. இந்தச் ‘சத்துணவெல்லாம்’ எங்கே போனது நண்பனே..?
விஜய்காந்த்தும், ஆம்னியும் ஏதோ ஒரு படத்தில் வீட்டின் சந்துபொந்திலெல்லாம் ‘புகுந்து’ விளையாடிக் கொண்டிருந்ததைக் காட்டி ‘அது எனக்கு வேண்டும்’ என்று இரண்டு நாட்களாய் அடம் பிடித்தாய்.. உனக்காக பர்மா பஜார் போய் அலையோ அலை என்று திரிந்து வாங்கி வந்து போட்டுக் காண்பித்தேன். அதன் பின்புதானே மேலேயும், கீழேயுமாக ஆடிக் கொண்டிருந்த நீ ஒரு வழியாக சரியானாய்.. இந்தளவுக்கு உனக்கு வந்த நோய்க்கெல்லாம் உடனடியாக மருத்துவம் செய்தேனே..
இவர்கள் மட்டுமா? கண்டம் விட்டுக் கண்டம் தாவுவது போல் பக்கத்து மாநிலத்திலும் போய் உனக்காக ‘லேகியங்களை’ சுட்டு வந்தனே.. நினைவில்லை..
ஷீலா, சீமா, சாரதா, மேனகா, ஊர்வசி, பார்வதி, லிஸி, என்று ஆரம்பித்து போகப் போக அதிலேயே மதி மயங்கிப் போய் ஷோபனா, வாணி விஸ்வநாத், மஞ்சுவாரியார், சம்யுக்தவர்மா, திவ்யா உன்னி, ஜோமோள், காவ்யா மாதவன், கீதுமோகன்தாஸ், ஜோதிர்மயி, மம்தா மோகன்தாஸ், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், விமலாராமன் என்று லேட்டஸ்ட் வரைக்கும் கொண்டு வந்து காண்பித்தனே.. மறக்கலாமா நண்பனே..?
“தெற்கு மட்டும் காட்டி என்ன புண்ணியம்? வடக்கு என்ன பாவம் செய்தது?” என்று நீ கேட்டது எனக்கும் கேட்டது. அதனால் ஐஸ்வர்யாராய், தபூ, மனீஷா கொய்ராலா, சுஸ்மிதாசென், ராணிமுகர்ஜி, ரவீணா டாண்டன், மல்லிகா ஷெராவத், வித்யாபாலன் என்று அழைத்து வந்து நிறுத்தினேனே.. என்னால் மறக்க முடியவில்லை.. உன்னால் எப்படி முடிந்தது நண்பா..?
நாள் முழுவதும் எனக்காக உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போய் நீயிருந்த நிலையில் குளிர் காற்றும், அதிக வெப்பமும் உனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதனால் இரவில் உன்னைப் போர்வையால் போர்த்தி வைத்தேன். விடிந்த பின்பு பார்த்தால் இந்தியா மேப்பையே அதில் வரைந்து வைத்திருந்தார் திருவாளர் எலியார்.
அதே எலியார் ஒரு நாள் உனது அன்புத் தம்பி திருவாளர் மெளஸை கொலை செய்துவிட, அன்று மட்டும் நீ மெளன அஞ்சலி செலுத்தும் விதமாக திறக்கவே மறுத்தாய்.. உனக்காக நான் ஆசை, ஆசையாக வாங்கி வைத்திருந்த புத்தகங்களை, எடைக்கு எடை போட்டு கிடைத்த பணத்தில் அருமையான புதிய தம்பியை வாங்கி வந்து கொடுத்தனே..
எலியாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு கடலை மிட்டாய் ஒன்றை வைத்து, அதனை அவர் கடித்து, மென்று, சாப்பிட்டுவிட்டு, கடைசியாக கீழ் வீட்டில் போய் மண்டையைப் போட்டுவிட.. அந்த வீட்டுக்காரம்மா வந்து கத்திய கத்து இருக்கிறதே.. ஞாபகமிருக்கிறதா..? கடைசியில் நான்தானே மூஞ்சு முழுக்க துணி சுற்றிக் கொண்டு அரை நாள் முழுவதும் தேடி அந்த எலியாரைத் தேடிப் பிடித்து தூக்கிச் சென்று அடக்கம் செய்தேன். மறந்துவிட்டாயே நண்பனே..
இவ்வளவும் யாருக்காக? உனக்காகத்தான்.. உங்களுக்காகத்தான்.. “நம்மையே சுத்தி, சுத்தி வரானுக.. எதாவது செய்யணும்னு நினைக்கிறேன். முடியலைன்னு நினைக்கும்போது, செத்துரலாம்போல தெரியுது” என்று சமுத்திரக்கனி போல நான் புலம்பி நிற்கவில்லை..
உன் மச்சான் கீபோர்டு உடல் நிலை சரியில்லை என்று இரண்டு பற்களை துப்பியபோது, உடனுக்குடன் வேறு பற்களை வாங்கி சரி செய்தேன். கொஞ்ச நாள் கழித்து எவ்வளவோ போராடியும் காச நோய் வந்து அவன் உயிரைவிட்டபோது நான் பட்டபாடு கொஞ்சமா? நஞ்சமா? ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த புது மச்சானை வாங்குவதற்கு நான் எதை விற்றேன் என்று உனக்கும் தெரியும்தானே..?
புது மச்சான் வந்தவுடன் ஒய்யாரமாக நீ புதிய, புதிய கதைகளையெல்லாம் கேட்டாய்.. எனது முதல் வாசகனாக கதை கேட்டு கருத்துச் சொன்னாய்.. சிரித்தாய்.. கண் கொள்ளாமல் இருந்தது எனக்கு.. யாரோ எங்கிருந்தோ கண் வைக்க.. நீ முதல் முறையாக வைரஸ் காய்ச்சலில் படுத்தாய்..
உன் வியாதிக்கு நான் மருந்தையும், மாத்திரைகளையும் வகை, வகையாக அருந்தினேன்.. ஒன்றா? இரண்டா? உன்னைக் கழட்டிப் போட்டுவிட்டு கையில் பணம் கொடுத்தால்தான் ஆபரேஷன் என்று சொல்லி என்னை மிரட்டி நான் கட்டியிருந்த கோவணத்தையும் உருவிவிட்டானே அந்தப் பொருத்துனன்.. அந்தக் கண்றாவி காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் நீ கண்ணடித்துவிட்டு எழுந்து வந்தாய்.. நானும் எனது வெட்கத்தை மறைத்து உன்னைத் தூக்கி வந்தனே. இதை எங்கே போய் சொல்வது?
“பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்..” என்பார்களே.. அது போலவே இந்த முறை உனது அண்ணன் திருவாளர் சிபியூ ரெண்டு புல் பாட்டில்களை தண்ணி கலக்காமல் குடித்து குப்புறப் படுத்துக்கொண்டார். அவரைச் சரி செய்வதற்கு என்னுடைய ஆறு மாத சேமிப்புப் பணம் ஒரே நாளில் கரைந்ததே.. அந்தக் கொடுமை தெரியும்தானே உனக்கு..?
நீ நன்றாக இருந்தால் உன் அண்ணனுக்கு வயித்து வலி.. உனது அண்ணனுக்கு தலைவலி என்றால், உனது மச்சானுக்கு கால் வலி.. என்று மூவரும் சேர்ந்து என்னை பாடாய்படுத்தினீர்கள்.. நானும் அவ்வப்போது உங்களுக்குத் தேவையானச் ‘சத்துணவு’களையும் கூடுதல் ‘ஆயுதங்களை’யும் வாங்கிக் கொடுத்து உங்களைக் கண் கலங்காமல்தான் வைத்திருந்தேன். இவ்வளவு செய்தும், இவ்வளவு பாசமாக இருந்தும் என்னைவிட்டுப் போக உனக்கு எப்படி ராசா மனசு வந்தது..?
நேற்றும் வழக்கமாக உனக்கு ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு உனது முன் அமர்ந்தேன். ‘வணக்கம்’ சொல்லிவிட்டதால் நீ கோபிக்க மாட்டாய் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.
உனக்கு உயிர் கொடுத்த சில நிமிடத்தில் வீடு முழுக்க ஒரு கெட்ட வாடை; எதுவோ கருகுவது போல்.. அக்கம் பக்கம் தேடினேன்.. முகர்ந்து பார்த்தேன் புரியவில்லை; தெரியவில்லை. குனிந்து உன் பின்னால் பார்த்தேன். அரண்டு போய்விட்டேன்.. தீ.. நெருப்புப் பிழம்பு.. ஜோதி என்பார்களே அது போல ஜெகஜோதியாக உனக்குள்ளே ஒரு நெருப்பு கனன்று எரிந்து கொண்டிருந்தது. கோவிலில் பார்த்தால் கும்பிட்டுவிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அந்த ஜோதியை, இப்போது உனக்குள் பார்த்ததும் பயத்துடன் அலறிவிட்டேன்..
பதட்டத்தில், மின்சார சுவிட்ச்சை ஆ·ப் செய்வதற்குள் “டப்” என்ற ஒரே ஒரு சப்தம். ஸ்டோர் ரூம் மாதிரியான வீடாச்சே நமது வீடு. அனைத்து வீடுகளிலும் கரண்ட் கட். காம்பவுண்ட் முழுக்க மயான அமைதி. சாம்பிராணி புகையைத் தவிர வேறு புகையை சுவாசித்திராத நமது வீடு, கந்தக சுவாசத்தை நேற்றுதான் அனுபவித்தது.. அவ்வளவு புகை..
5 வீட்டிலும் ஓடி வந்து என்னிடம் குசலம் விசாரித்தார்கள். சொல்ல முடியவில்லை.. கரண்ட் வர வேண்டும்.. உனக்கு என்ன ஆனது என்று பார்க்க வேண்டும் என்ற பதைப்பில் இருந்த எனக்கு 2 மணி நேரம் கழித்து மின்சாரம் வந்தவுடன் ஓடோடி வந்து உன்னைப் பார்த்த நான் கதறியேவிட்டேன். “ஐயோடா தம்பீ.. இப்படியா நீ இருப்பாய்? அக்ரஹாரத்து அம்பியைப் போல் அழகாக இருந்த நீ, பெருமாள் கோவில் எண்ணைச் சட்டியைப் போல் ஆகிவிட்டாயே..?” கொடுமையடா முருகா..
இதுநாள்வரையில் எனக்காக உன் உடல், பொருள், ஆவி முழுவதையும் ஒப்படைத்திருந்த என் கண்மணியே, இந்திய நேரப்படி நேற்று இரவு 10.52 மணிக்கு நீ உயிரைவிட்டு விட்டாய் என்பதனை சென்னை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை கண்ணீரோடு சொல்கிறேன்.
அன்பின் திருவுருவமே.. அடக்கத்தின் அடையாளமே.. தியாக சீலனே.. ஓய்வறியாத உழைப்பாளியே.. ஒப்பற்ற செயல்வீரனே.. சென்று வா.. உனது உழைப்பை, தியாகத்தினை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன்.. என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்..
முருகா! இனி நீயே துணை..!